Breaking News

லால்பேட்டையில் உரூஸ் விழா: கடை அடைப்பு

J.நூருல்அமீன்
0
சிதம்பரம், ஜூலை 14: காட்டுமன்னார்கோவிலை அடுத்த லால்பேட்டையில் இருபிரிவு முஸ்லிம்களிடையே மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனிப்பட்ட நபர் நடத்தும் உரூஸ் விழா தொடங்கியது. இதனைக் கண்டித்து லால்பேட்டை ஜமாஅத் சார்பில் செவ்வாய்க்கிழமை கடைஅடைப்பு நடத்தப்பட்டது.
லால்பேட்டையைச் சேர்ந்த மதகுரு பைஜிஷாநூரி கடந்த 2005-ம் ஆண்டு இறந்தார். இவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் மதகுருவின் உடலை வீட்டின் பின்புறம் அடக்கம் செய்து கடந்த 3 ஆண்டுகளாக மசூதியில் நடத்தப்படும் சந்தனக்கூடு என்கிற உரூஸ் விழாவை நடத்தி வருகின்றனர்.
இதற்கு லால்பேட்டை ஜமாத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மதகுரு பைஜிஷாநூரி அடக்கம் செய்த இடத்தில் உருஸ்விழாவை நடத்தினர்.
அப்போது உரூஸ்விழா நடைபெற்ற இடத்தை ஒரு பிரிவு முஸ்லிம்கள் அடித்து நொறுக்கியதால் கலவரம் ஏற்பட்டு போலீஸôர் உள்ளிட்டோர் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு உரூஸ்விழா நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்புடன் கொடிஏற்றுதல், கவாலிபாடுதல், சந்தனம்பூசுதல் நிகழ்ச்சிகள் இன்றி திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமையுடன் முடிவடைகிறது.
உரூஸ்விழாவுக்கு, ஊர் ஜமாஅத் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை கடைகளில் கறுப்புக்கொடி ஏற்றி கடைஅடைப்பு செய்யப்பட்டது.
இருபிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்படாமல் இருக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் அஸ்வின் கோட்னிஸ் மேற்பார்வையில் கூடுதல் எஸ்பி சக்திவேல் தலைமையில் 2 டிஎஸ்பிக்கள், 6 இன்ஸ்பெக்டர்கள், 24 சப்-இன்பெக்டர்கள் மற்றும் 180 ஆயுதப்படை போலீஸôர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Tags: கடை அடைப்பு லால்பேட்டை

Share this