Breaking News

நரகிலிருந்து புனித ரமளானில் பாதுகாப்புத் தேடுவோம்!

நிர்வாகி
0
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்தின் அருட்கொடை நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!


புனிதமிக்க ரமலானின் இறுதிக் காலகட்டத்தை அடைந்துள்ளோம். ஆயிரம் மாதங்களைவிட சிறந்த லைலத்துல் கதர் எனும் சிறப்புமிக்க இரவை தாங்கி வரும் இந்த இறுதிப் பத்தில், இறைவன் நிராகரிப்பாளர்களுக்காகவும்-இணைவைப்பாளர்களுக்காகவும்-பாவிகளுக்ககவும் சித்தப்படுத்தியுள்ள நரகத்திலிருந்து பாதுகாப்புப்பெற எஞ்சியுள்ள புனித ரமலானை நாம் பயன்படுத்த முன்வரவேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக அமல்களை கொண்டு அழகுபடுத்த வேண்டிய இந்த நாட்களை, அழகான ஆடைகள் எடுப்பதிலும், அழகுசாதன பொருட்களை வாங்குவதிலும், வீட்டை அழகுபடுத்துவதிலும் சமுதாய மக்கள் கூடுதல் கவனம் செலுத்துவதை பார்க்கிறோம். இதற்கு காரணம் நரகம் எவ்வளவு கடுமையானது என்பதை அறியாமலிருப்பதுதான். இன்னும் சிலர் நரகத்தை வேடிக்கையாககருதுவதையும் பார்க்கிறோம்.

சமீபத்தில் ஒரு அறிஞர் தலைமை தாங்கிய இஸ்லாமிய பட்டிமன்றம் பார்த்தோம். அதில் நகைச்சுவைக்காக சுவனத்தையும்-நரகத்தையும் பற்றி ஒருதம்பதியர் சம்பாஷணையில் இப்படி வர்ணிக்கிறார்

கணவன்;[மனைவியிடம்] அடியே! மவ்த்துக்கு பின்னால், நீ சொர்க்கத்துக்கு செல்வாயா? நரகத்துக்கு செல்வாயா?

மனைவி; நான் சொர்க்கத்துக்குத்தான் செல்வேன் என்று சொல்லிவிட்டு, கணவனை நோக்கி; நீங்கள் சொர்க்கத்திற்கு செல்வீர்களா? நரகத்திற்கு செல்வீர்களா?

கணவன்; நான் நரகத்திற்குத்தான் செல்வேன் ஏனெனில், நீ போன பின்னாடி சொர்க்கம் சொர்க்கமாவாஇருக்கும்?

மனைவி; அப்ப நானும் நரகத்திற்கு வருவேன்.

கணவன்; என்மீது உனக்கு அவ்வளவு பாசமா?

மனைவி; பாசமும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. நீங்கள் நரகில் படும் வேதனையை நான் பார்த்து ரசிக்கத்தான்..!

இப்படியாக நகைச்சுவை என்ற பெயரில் சொர்க்கம்-நரகை பற்றி ஏளனமாக வர்ணிக்கிறார். இவர் மட்டுமல்ல சமுதாயத்தில் பெரும்பாலோர் நரகின் வேதனை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. காரணம் நரகத்தின் வேதனைகளை தெளிவாக அறியாததினால்தான். நரகத்தின் வேதனையை பற்றி வர்ணித்தால் அது பல பக்கங்களை எட்டும். எனவே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல, நரகின் கடுமையை அறிய ஒரே ஒரு பொன்மொழி;

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்;

நபி(ஸல்) அவர்களிடம் அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், 'அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரின் (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவரின் மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதிக்கும்' என்று சொல்ல கேட்டேன்.[புஹாரி]

மிக குறைவான தண்டனையை அனுபவிக்கும் அபூதாலிப் அவர்களின் மூளைகொதிக்கும் என்றால், அதிகப்படியான தண்டனை பெறுபவர்களின் நிலை என்ன என்பதை யோசித்து பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட நரகிலிருந்து நம்மை காத்துக்கொள்ள இந்த இறுதிப்பத்தில் செய்யவேண்டியவைகள்;

லைலத்துல் கத்ரை தேடுதல்;

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். (97:1)

وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ

மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? (97:2)

لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். (97:3)

تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ

அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். (97:4)

سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ

சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97:5)

ஒரு இரவில் நாம் நின்று வணங்குவதன் மூலம் ஆயிரம் மாதத்திற்கும் மேலாக வணங்கிய நன்மையை வாரித்தரும் இரவுதான் லைலத்துல் கதர் இரவு. இந்த இரவு எப்போது என்று நபி[ஸல்] அவர்கள் அறுதியிட்டுக்கூறாமல், ரமலானின் இறுதிப்பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் தேடுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

அந்த இரவு நோன்பு 21 -23 -25 -27 -29 ஆகியவற்றில் எதாவது ஒரு இரவில் இருக்கலாம். இத்தகைய சிறப்புவாய்ந்த இரவின் அமலை கெடுக்கும் வகையில் சுன்னத்ஜமாத் என்று தங்களை கூறிக்கொள்வோர் நோன்பு 27 அன்றுதான் லைலத்துல் கத்ர் என்று தீர்மானமாக முடிவு செய்து அமல் செய்வதை பார்க்கிறோம்.

ஒருவேளை அன்று லைலத்துல் கத்ர் இல்லாமல் முந்திய-அல்லது பிந்தைய நாளில் இருந்தால் என்னாகும் என்ற அச்சம் இவர்களுக்கு இல்லை. எனவே இவர்கள் பேச்சை கேட்டு அமலை வீணாக்கிவிடாமல், நபி[ஸல்] அவர்களின் கூற்றுப்படி இறுதிப்பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் தேட முற்படவேண்டும்.

இறுதிப்பத்தில் நபி[ஸல்] அவர்களின் அமல்;

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!"

நூல்;புஹாரி எண் 2024 ]

முன்-பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட நபி[ஸல்] அவர்களே இறுதிப்பத்தில் இல்லறத்தொடர்பு துறந்து இறைவனை வணங்குவதோடு-தமது குடும்பத்தாரையும் அல்லாஹ்வின் அருளைப்பெரும் அமல் செய்ய தூண்டுகிறார்கள் எனில், பாவங்களில் புரளும் நாம் எந்த அளவுக்கு இந்த இறுதிப்பத்தில் அமல் செய்யவேண்டும் என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

'இஃதிகாப்' இருத்தல்;

ரமலானில் இறுதிப்பத்தில் நபி[ஸல்] அவர்கள் இஃதிகாப் இருப்பார்கள். இஃதிகாப் என்பது [அவசிய தேவைக்கன்றி] வெளியே வராமல் பள்ளிவாசலில் தங்கி அமல் செய்வதாகும். துரதிஷ்டவசமாக இந்த நபி வழியை பெரும்பாலான தவ்ஹீத்வாதிகள் கூட செய்யத்தயாரில்லை. இனியேனும் இந்த நபி வழிக்கு உயிர்கொடுக்க முன்வரவேண்டும்.

பிரார்த்தனைகளை அதிகமாக்குவது;

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)[திர்மிதி]

எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த புனித ரமலான் மூலம் பாவங்களை விட்டும் தூரமாகி, அவனது அருளுக்குரிய நல்லடியார்களாக ஆக்கியருள்வானாக!
நன்றி: முகவை எக்ஸ்பிரஸ்

Share this