Breaking News

சென்னையில் இருந்து 460 ஹஜ் பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது

நிர்வாகி
0

460 ஹஜ் பயணிகளுடன், முதல் விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது. துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி.ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

460 ஹஜ் பயணிகள்
முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவதற்காக, சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 5022 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த புனித ஹஜ் பயணத்திற்காக 11 விமானங்கள் இயக்கப்படுகின்றன. முதல் விமானம் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 460 பேர் சென்றனர்.

மு.க.ஸ்டாலின்-கனிமொழி

ஹஜ் பயணத்திற்கு சென்றவர்களை தமிழக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவிஞர் கனிமொழி எம்.பி., அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் சால்வைகளை தந்து புனித பயணம் சிறப்பாக அமைய வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர். இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான பிரசிடென்ட் அபூபக்கர், இந்திய குழு செயல் அலுவலர் டாக்டர் ஜாகீர் உசேன், தமிழக அரசு செயலாளர் அலாவுதீன் ஆகியோரும் அவர்களை வாழத்தி அனுப்பி வைத்தனர்.


பின்னர் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், "புனித ஹஜ் பயணிகளை தமிழக முதல்வர் சார்பில் வாழ்த்தி வழியனுப்ப வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தமிழகத்தில் இஸ்லாமிய மக்கள் தொகை அடிப்படையில் 2700 பேர் புனித ஹஜ் பயணத்திற்கு சென்றனர். இந்த பட்டியலை அதிகப்படுத்தி தரவேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் 4241 பேர் செல்கின்றனர். ஹஜ் பயணிகள் எந்த வித சிரமமும் இன்றி புனித பயணத்தை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன'' என்று கூறினார்.

Share this