Breaking News

ஹஜ் பயணம் செல்ல 3,049 பேர் குலுக்கல் முறையில் தேர்வு

நிர்வாகி
0
சென்னை:தமிழகத்திலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 3,049 பயணிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.அரசின் மானியம் பெற்று ஆண்டுதோறும் ஹஜ் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதற்கான, குலுக்கல் சென்னை, ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா குலுக்கலைத் துவக்கி வைத்தார்.

இந்திய ஹஜ் குழு துணைத் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். அரசு செயலர் சந்தானம், சிறுபான்மையினர் நலத்துறை உறுப்பினர் செயலர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹஜ் பயணம் செல்ல ஏழு குழந்தைகள் உட்பட, 10 ஆயிரத்து 465 பேர் விண்ணப்பித்து இருந்தனர். குலுக்கலில் 3,049 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில், 70 வயதுக்குப் மேற்பட்டோர், ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்து மூன்று ஆண்டுகளாகக் காத்திருப்பவர்கள் என 981 பேர் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்பட்டனர்.எஞ்சியுள்ளவர்களுக்கு மாநில அளவிலான காத்திருப்போர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்வு செய்யப்பட்டோர் விவரத்தை www.hajcommittee.com மற்றும் www.hajjtn.orgஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
மதுரையிலிருந்து நேரடி விமானம்: இந்த ஆண்டு முதல் மதுரையிலிருந்து ஹஜ் செல்ல, நேரடி விமான சேவை துவங்க உள்ளதாக, இந்திய ஹஜ் குழு துணைத் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது:தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து விமானத்தில் செல்வதால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, மதுரையிலிருந்து நேரடியாகச் செல்ல விமான சேவை துவங்கப்பட உள்ளது. இதேபோல், ஆந்திர மாநிலம் ராய்ப்பூரிலிருந்தும் ஹஜ் செல்ல, நேரடி விமான சேவை துவங்கப்பட உள்ளது. உடமைகளைக் கொண்டு செல்வதற்கு, ஹஜ் குழு இலவசமாக பெட்டிகளை வழங்குகிறது.புதுச்சேரி, அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஹஜ் பயணிகள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆந்திராவில் ஹஜ் ஹவுஸ் கட்ட மத்திய அரசு 2 கோடி ஒதுக்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: "ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவதால், தமிழக ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்' என பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், "தமிழக ஒதுக்கீட்டை அதிகரிக்க முதல்வர் உத்தரவின் பேரில் துரித நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Tags: சமுதாயசெய்தி

Share this