Breaking News

மணவை முஸ்தபா நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்: முதல்வர்

நிர்வாகி
0
அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபாவின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபா 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தொண்டு ஆற்றி வருகிறார். 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்', 'கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி' போன்ற இவரது நூல்கள் பரிசுகள் பல பெற்றுள்ளன. தமிழக அரசின் 'கலைமாமணி விருது', 'திரு.வி.க.விருது' ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.


இவர் இரண்டு தொகுதிகள் கொண்ட 'அறிவியல் கலைச்சொல் அகராதி” உட்பட பல நூல்களைப் படைத்துத் தமிழ்மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். தற்போது முழுமையாகப் பேசவோ, எழுந்து செயல்படவோ இயலாத நிலையில், உடல்நலம் குன்றியுள்ள மணவை முஸ்தபா முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தமது உடல்நிலை குறித்து எடுத்துரைத்துத் தம் மருத்துவச் செலவிற்குப் பயன்படும் வகையில் தாம் படைத்துள்ள அனைத்து நூல்களையும் நாட்டுடைமையாக்கி, தமக்கு பரிவுத் தொகை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

முஸ்தபாவின் கோரிக்கையை ஏற்று அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி, அவருக்கு பத்து லட்ச ரூபாய் பரிவுத் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Share this