Breaking News

மீள் பதிவு : - ஜகாத்தைப் பற்றி…! முப்தி காஜி A.நூருல் அமீன் மன்பயீ ஹள்ரத்

நிர்வாகி
0

பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் கேபிடலிஸம்,கம்யூனிஸம், சோஷலிஸம் போன்ற இஸங்கள் தோன்றியுள்ளன.தோன்றிய இஸங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன என்பதுதெளிவான விஷயம்; மனிதனைப் படைத்த இறைவன், மனிதனுக்காக தீட்டிய திட்டங்கள், இறக்கியருளியச் சட்டங்கள்,அவை கள்தான் முழு வெற்றி பெறமுடியும்.

ஜகாத், மனிதனைப் படைத்த இறைவனால், பொருளாதாரம்சீராக அமைய அது வளமிக்கதாக ஆக, ஓரிடத்தில் குவியாமல் இருக்க, வறுமை நீங்க, கொடுக்கப்பட்ட அற்புதமானதிட்டமாகும். அதுவே சட்டமாகும்.

பொருள் வளத்தில் அனைவரும் சமமாக இருந்தால்வேலைகள் நடைபெறாது-பொருட்கள் உற்பத்தியாகாது. உடல்பலம் ஒருவரிடம், பொருள்பலம் மற்றொருவரிடம், அறிவுத்திறன்வேறொருவரிடம், இப்படியாக படைத்து ஒருவர் மற்றவரைஅணுகி வாழவேண்டு மென்ற நியதியை அல்லாஹ்ஏற்படுத்தியுள்ளான்.

மனிதர்கள் அனைவரையும் பொருள் வளமிக்கவர்களாகஆக்குவது அல்லாஹ்வால் முடியாத செயல் அல்ல. அவனுடையகருவூலம் அள்ளினால் குறைந்துவிடும் தன்மை பெற்றதும் அல்ல.ஆற்றல்கள் அனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ், ஏற்றத்தாழ்வுகளை இந்த உலக நியதியாக ஆக்கியுள்ளான். ஏற்றத் தாழ்வுகளினால் மனிதன் முடங்கி விடாமல் முன்னேற, சில பலசட்டங்களையும் இறக்கி அருளியுள்ளான். அவைகளில்ஒன்றுதான் ஜகாத் என்னும் அருமையான திட்டம்.

ஜகாத்தைப் பற்றி குர்ஆன்

தொழுகையை நிறைவேற்றியும், ஜகாத்தை கொடுத்தும்வாருங்கள்.(நீங்கள் மரணமடையும் முன்பு) உங்களுக்காக நீங்கள் அனுப்பி வைத்த நன்மைகளை (மறு உலகில்)அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அல்லாஹ் நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 2:110)

தங்கம், வெள்ளியை சேமித்து வைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாதவர்களுக்கு கடுமையானவேதனையுண்டு என நபியே! நீர் செய்தி கூறுவீராக!

அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவர்களின்நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும்,அவற்றைக் கொண்டே சூடு போடப்படும். இவைதாம் நீங்கள்உங்களுக்காக சேமித்து வைத்தவை. ஆகவே, நீங்கள் சேமித்துவைத்ததை சுவைத்துப் பாருங்கள் என்றுகூறப்படும்.(அல்குர்ஆன் 9:34,35)

அல்லாஹ் தன் பேரருளால் அவர்களுக்கு வழங்கியவற்றில்கஞ்சத்தனம் செய்பவர்கள் அது தங்களுக்கு நல்லது எனஎண்ணிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்குதான்.அவர்கள் கஞ் சத்தனம் செய்த பொருளை மறுமை நாளில்அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக மாட்டப்படும். (அல்குர்ஆன்3:180

ஜகாத்தைப் பற்றி நபிமொழி

எவருக்கு அல்லாஹ் பொருள் செல்வத்தைக் கொடுத்தானோஅவர் தமக்கு கொடுக்கப்பட்ட செல்வத்திற்குரிய ஜகாத்தை நிறைவேற்றவில்லையெனில் அச்செல்வம் கியாமத் நாளில்விஷம் நிறைந்த பாம்பின் வடிவத்தில் தோற்றமெடுத்து, அவரின்கழுத்தில் அது சுற்றிக் கொள்ளும்.

அதனுடைய கடுமையான விஷத்தின் காரணமாக, தலைமுடிகள் உதிர்ந்து வழுக்கைத் தலையாகிவிடும். அதன் இரு கண்களுக்கு மேலாக வெண்ணிறமான இரு புள்ளிகள் இருக்கும்.(இதுவே விஷம்நிறைந்த பாம்பின் அடையாளமாகும்).

கழுத்தைச் சுற்றிக் கொண்ட அந்த பாம்பு, “நான் தான் நீசேர்த்து வைத்த செல்வம், நீ புதைத்து வைத்த புதையல்” என்றுகூறிக் கொண்டே, அவனை அது தீண்டிக் கொண்டே இருக்கும்என நபி கள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரீ

ஜகாத் நிறைவேற்றப்படாத செல்வம் அழிந்தே தீரும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள்அறிவித்துள்ளார்கள். நூல் : முஸ்னத் ஷாபியீ

ஹள்ரத் அஸ்மா பின்த் யஜீத் அறிவித்துள்ளார்கள்: நானும்,என்னுடைய சிறிய தாயாரும் கையில் தங்க வளையல்அணிந்தவர்களாக பெருமானாரிடம் சென்றோம்.

இதனுடைய ஜகாத்தை நிறைவேற்றி விட்டீர்களா? என நபிபெருமானார் எங்களிடம் வினவினார்கள். நிறைவேற்றவில்லைஎன பதிலளித்தோம்.

இதைச் செவியுற்ற பெருமானார், உங்கள் இருவருக்கும்கியாமத் நாளில், அல்லாஹ் நெருப்புக் காப்புகள் அணிவிப்பதைப்பற்றிய பயம் இல்லையா?’ என எச்சரித்து, அதற்குரிய ஜகாத்தை நிறைவேற்றி விடுங்கள் என கட்டளையிட்டார்கள். நூல்: அஹ்மது

அல்லாஹ்வின் அச்சமுடையோருக்கு ஓரிரு ஆதாரங்களேபோதுமானது. இதை உணர்ந்து செயல்பட அல்லாஹ் தவ்பீக்செய்வானாக.

1. ஜகாத் என்றால் என்ன?

ஜகாத்’ என்ற சொல்லிற்கு சுத்தமாக்குதல், அதிகமாகுதல்,வளர்தல் என்ற பொருள்கள் அகராதியில் எழுதப்பட்டுள்ளன.ஜகாத்துடைய நிஸாப் பெற்றிருப்பவர், அவரிடம் இருக்கும்பொருட்களில் நாற்பதில் ஒரு பகுதியை தகுதியுடைய ஏழைக்குகொடுத்து உரிமைப் படுத்துவதை `ஜகாத்’ எனக் கூறுகிறது இஸ்லாம்.

அகராதியில் கூறப்பட்டுள்ள பொருளையும், இஸ்லாம் கூறும்பொருளையும் இணைத்து ஆராயும்போது, ஜகாத்தினால்கிடைக்கும் பயன்கள் தெளிவாகத் தெரிகின்றன.செல்வந்தர்கள், தங்கள் மீது கடமையான ஜகாத்தை நிறைவேற்றுவதால், அவர்கள் பாவங்களிலிருந்து தூய்மைப்பெறுகிறார்கள்; அவர்களின் செல்வங்களும் தூய்மைபெறுகின்றன; அவைகள் பரக்கத் பெற்ற வளர்ச்சி அடைகின்றன.

ஜகாத் கடமையாகும் பொருட்கள்….

தங்கம், வெள்ளி இவைகளின் விலைக்கு சமமாக

உள்ளரூபாய்கள், வியாபாரப் பொருட்கள், கால்நடைகள், தானியங்கள்,காய்கறிகள் ஆகிய பொருட்கள் ஜகாத் கடமையாவதற்குரியபொருட்களாகும்.

பருவ வயதையடைந்த – புத்தி சுவாதீனமுள்ள முஸ்லிம்செல்வந்தர்களின் மீது இது கடமையாகும்.

ஜகாத் கடமையாகும் பொருட்களில் தனக்கும், தன்குடும்பத்திற்கும் தேவையான பொருட்கள் போக கூடுதலாகஎவரிடம் இருக்கின்றதோ அவர்கள்தான் இஸ்லாமியப்பார்வையில் செல்வந்தர்கள். அந்த கூடுதலுக்கும் இஸ்லாம் ஒருவரம்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரம்புக்கு பெயர் `நிஸாப்’என்று கூறுவர்.

ஜகாத் கடமையாகும் அளவான நிஸாபின் அளவுஎன்ன?

தங்கம், பவுன் – எண்பத்தி ஏழரை கிராம்வெள்ளி – அறுநூற்று பனிரெண்டரை கிராம்தேவையை விட கூடுதலாக இருக்கும் பொருட்களுக்கும் இந்த அளவு அடிப்படை நிஸாப் ஆகும்.

எவ்வளவு ரூபாய் இருந்தால் ஜகாத் கடமையாகும்?

அந்த கால கட்டத்தில் அறுநூற்று பனிரெண்டரை கிராம்வெள்ளியின் விலை எவ்வளவு இருக்கின்றதோ அந்த அளவுக்குரூபாய் இருந்தால் ஜகாத் கடமையாகும்.

ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு ரூபாயைவெள்ளியின் அளவுடன் இணைக்கப்படுகிறது. அதுவே,தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் தீர்ப்பாகும்.

இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தை விட வெள்ளியின்விலை குறைவாக இருப்பதால் வெள்ளியில் ஜகாத்தின்அடிப்படை நிஸாப்பாக உள்ள அறுநூற்று பனிரெண்டரை கிராம்வெள்ளியின் விலைக்கு சரிநிகரான ரூபாயின் மீது ஜகாத்கடமையாகும். இதுதான் ரூபாயில் ஜகாத்தின் நிஸாப் ஆகும்.

உதாரணமாக, இன்றைய நிலவரப்படி இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 73 ரூபாய் 70 காசு என்ற அடிப்படையில் 612.5 கிராம் வெள்ளியின் விலை 45141 ரூபாய் எவருடைய கையில் ஓர் ஆண்டுகாலமாக இருக்கிறதோ அவர்மீதும் ஜகாத் கடைமயாகும். கையில் இருந்தாலும் பேங்கில் இருந்தாலும் டிபாஸிடில் இருந்தாலும் பிறருக்கு கடனாக கொடுத்திருந்தாலும் அதன் மீது ஜகாத் கடமையாகும்.

ஜகாத்துடைய பொருட்களை நிஸாப் அளவிற்குபெற்றிருப்பவர்கள் மீது உடனடியாக ஜகாத் கடமையாகாது. ஓர்ஆண்டு முழுமையாக கழிந்த பின்னால்தான் ஜகாத்கடமையாகும். அடிப்படை நிஸாப்பிற்கு மட்டுமே ஆண்டுமுழுமை பெற வேண்டும் என்பது நிபந்தனையாகும். அடிப்படை நிஸாப்பிற்கு அப்பால் கூடுதலாக வந்து இணைபவைகளுக்குஓர் ஆண்டு முழுமை பெற வேண்டும் என்பது நிபந்தனை அல்ல.அடிப்படை நிஸாப்பிற்கு ஜகாத் கடமையாகும் போது கூடுதலாக இடைப்பட்ட காலத்தில் இணைந்ததற்கும் ஜகாத் கடமையாகும்.

சான்று

சென்ற ஆண்டு ரமளான் மாதத்தில் 11 பவுன் நகை ஒருவர்வாங்கினார். இந்த ஆண்டு ரமளானில் அந்த நகைக்கு ஜகாத்கடமையாகி விடும். சென்ற ஆண்டு ரமளானுக்கு பின் 6 மாதம்கழிந்து 9 பவுன் நகை வாங்கினார். இப்போது அவரிடம் இருப்பது20 பவுன் நகை. இதில் 11 பவுன் ஓர் ஆண்டு முழுமை பெற்றுவிட்டது. 9 பவுனுக்கு 6 மாதம் மட்டுமே முழுமை பெற்றுள்ளது. இருந்தபோதிலும் இவர் 20 பவுன் நகைக்கும் ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும். காரணம், அடிப்படை நிஸாத்திற்கு மட்டுமேஓர் ஆண்டு முழுமை பெற வேண்டும் என்பது நிபந்தனையாகும். இடையில் வந்து சேர்ந்தவைகளுக்கு அந்த நிபந்தனை இல்லை.

வணிகப் பொருட்கள் பற்றி ஜகாத் கடமைகள்!

வணிகப் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதன் மதிப்புஅறுநூற்று பனிரெண்டரை கிராம் வெள்ளி எடையின் விலைக்குசமமாக இருந்தால் அப் பொருட்களின் மீது ஜகாத் கடமையாகும்.எனவே, வணிகர்கள் தங்கள் கடைகளில் விற்பனைக்காக உள்ளபொருட்களை ஆண்டுதோறும் கணக்கிட்டு மொத்த பொருட்களின் மதிப்பீட்டில் 40-ல் ஒரு பாகத்தை ஜகாத்தாக நிறைவேற்றிடவேண்டும்.

கால் நடைகள் பற்றி ஜகாத் கடமைகள்!

5 அல்லது அதைவிட கூடுதலான ஒட்டகங்கள்.30 அல்லது அதைவிட கூடுதலான மாடுகள்40 அல்லது அதைவிட கூடுதலான ஆடுகள் முதலியவைகள்மீதும் ஜகாத் கடமையாகும். இவைகள் கால்நடைகளுக்குரிய நிஸாப் ஆகும்.

ஒருவர் மீது ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள்!

முஸ்லிமாக இருக்க வேண்டும் – பருவ வயதை அடைந்தவராக இருக்க வேண்டும் – சுயஅறிவு பெற்றவராக இருக்கவேண்டும் – சுதந்திரமுள்ள மனிதராக இருக்க வேண்டும் – நிஸாப்அளவிற்கு செல்வம் பெற்றவராக இருக்க வேண்டும் – பொருட்களின் மீது முழு அதிகாரம் பெற்றவராக இருக்க வேண்டும் – அதுஅவரது கைவசத்தில் இருக்க வேண்டும் – முக்கிய தேவைகளுக்குரிய பொருட்கள் போக மீதமுள்ள பொருட்களாக இருக்கவேண்டும் – கடன்கள் நீங்கலாக உள்ள தொகை, ஜகாத்தின் நிஸாபை அடையப் பெற்றிருக்க வேண்டும் – வளரும்பொருளாகவோ, வளரும் பொருள் மாதிரியாகவோ இருக்கவேண்டும் – ஜகாத்துடைய நிஸாப் ஓர் ஆண்டு முழுமை பெற்றிருக்க வேண்டும்.

இத்தனை நிபந்தனைகளுக்கும் உட்பட்ட செல்வம் அல்லதுபொருட்கள் எவரிடம் இருக்கிறதோ அவர் மீது ஜகாத் கடமையாகும். மற்றவர் மீது ஜகாத் கடமையாகாது.

நிஸாபுடைய அளவை பெற்றிருந்தும் ஜகாத்கடமையாகாத பொருட்கள்….

குழந்தைகளுக்கு சொந்தமான நகைகள், காசு, பணம், பொருட்கள் மீது ஜகாத் கடமையாகாது. புத்தி சுவாதீனமற்ற செல்வந்தரின்பொருளிலும் ஜகாத் கடமையாகாது.அடமானமாக வைக்கப்பட்ட பொருளின் – நகைகள் மீது ஜகாத்கடமையாகாது.

காணாமல் போன பொருள் திரும்பவும்கிடைத்தால், காணாமல் போன அந்த கால கட்டத்திற்கு ஜகாத்கடமையாகாது.

பிராவிடண்ட் ஃபண்டில் இருக்கும் தொகை மீது ஜகாத்கடமையாகுமா?

பிராவிடண்ட் ஃபண்டில் இருக்கும் தொகை நம்முடையகரத்தில் கிடைத்த நாளிலிருந்துதான் ஜகாத்துக்குரிய பொருளாகும். அது அரசாங்கத்திலோ, வேறு நிறுவனங்களிலோ எத்தனைஆண்டுகள் இருந்ததோ அத்தனை ஆண்டுகளுக்கும் ஜகாத்தைகணக்கிட்டு அதை நிறைவேற்ற வேண்டும் என்பது கடமையல்ல. இது பலவீனமான கடன் வகையைச் சார்ந்ததாகும்.எனினும், பிராவிடண்ட் ஃபண்டில் சேர்க்கப்பட்ட பணம்ஜகாத்துடைய நிஸாபை அடைந்த நாளிலிருந்து ஆண்டுகளைகணக்கிட்டு அத்தனை ஆண்டுகளுக்கும் உரிய ஜகாத்தை நிறைவேற்றுவது பேணுதலான விஷயமாகும்.

ஜகாத் கடமையாகாத பொருட்களில் சில….

குடியிருக்கும் வீடு – அணிவதற்குரிய ஆடைகள்புழங்குவதற்குரிய பாத்திரங்கள் – தட்டைகள், தட்டுமுட்டுசாமான்கள், ஃபர்னிச்சர்கள், கார்கள், வண்டிகள், சைக்கிள்கள்,கிதாபுகள், புத்தகங்கள், போர் ஆயுதங்கள், தொழிற் கருவிகள்,மனைகள் போன்ற பொருட்கள் மீது ஜகாத் கடமையாகாது. இவைகள் வணிகத்திற்காக வாங்கப்பட்டிருந்தால் ஜகாத்கடமையாகி விடும்.வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடுகள், கார்கள், பாத்திரங்கள்,கடைகள் எத்தனை இருந்தாலும் அவைகள் மீது ஜகாத் கடமையாகாது. வாடகைப் பொருட்களிலிருந்து கிடைக்கும் வருமானங்கள் ஜகாத்தின் நிஸாபை அடைந்திருந்தால் அந்த வருமானங்கள்மீது ஜகாத் கடமையாகும்.

அடமானமாக வைக்கப்பட்டுள்ள தங்க நகை மீது ஜகாத்கடமையாகுமா?

பிறர் கடன் கேட்கும் போது, அவரிடம் நகையை கொடுத்துஅடமானமாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளுங்கள் எனக்கூறிஅந்த நகை அடமானமாக வைக்கப்பட்டிருந்த காலத்திற்கும் அந்த நகை மீது ஜகாத் கடமையாகும்.மாறாக, நமக்கு பணம் தேவைப்படும் போது நகையைஅடமானம் வைத்து கடன் பெற்றால் அப்போது அந்த நகை மீதுஜகாத் கடமையாகாது. (குறிப்பு) நகையை அடமானம் வைத்து வட்டிக்கு கடன் வாங்குவது பெரும் பாவமாகும். அதிலிருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும். அடமானம் வைத்து வட்டியில்லாத கடன் வாங்கலாம்.

ஜகாத் பெற தகுதியுடையோர்…

ஜகாத் கடமையானவர்கள், தங்கள் விருப்பப்படி அவர்கள்விரும்பும் நபர்களுக்கெல்லாம் கொடுத்து விட முடியாது.அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ள 8 பிரிவினருக்கு மட்டுமேகொடுக்க வேண்டும். இதற்கு மாறாக செயல்பட்டால் ஜகாத் என்றகடமையை நிறைவேற்றியவர்களாக ஆக மாட்டார்கள்.ஏழைகள், தரித்திர நிலையில் உள்ள ஏழைகள், ஜகாத்வசூலிப்பவர்கள், புதிதாக இஸ்லாத்தை தழுவியோர்,அடிமைகளை விடுதலை செய்தல், கடனில் மூழ்கி கிடப்பவர்கள்அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்தவர்கள் – வழிப்போக்கர்கள்.

ஜகாத் பணத்தை கொண்டு செய்யக் கூடாதவை

பள்ளிவாசல் கட்டுதல், அதனுடைய மராமத்துப் பணிகள்செய்தல், மதரஸா கட்டுதல், மருத்துவமனை நிறுவுதல், அனாதை இல்லம் அமைத்தல், சாலை வசதி செய்தல், தண்ணீர் குழாய்அமைத்தல், நீர்த் தேக்கங்கள் நிர்மாணித்தல் போன்ற கட்டடப்பணிகளுக்கும், இமாம்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்குசம்பளம் கொடுத்தல் போன்ற வேலைகளுக்கும் ஜகாத் பணத்தைஉபயோகிக்கக் கூடாது. அதை பெற்ற முத்தவல்லிகளும், நிர்வாகிகளும் அவைகளுக்கு அதை பயன்படுத்தக் கூடாது. இவைகளில் செலவு செய்யப்படுமேயானால் ஜகாத் என்றகடமை நிறைவேறாது.(குறிப்பு) மதரஸா, பள்ளிவாசல், மருத்துவமனை, சாலை வசதி,தண்ணீர் வசதி போன்ற செயல்கள் மிக முக்கியமான, உன்னதமான நற்செயல்கள் என்பதில் மாறுபட்ட கருத்துகள் கிடையாது. இவைகளை நன்கொடைகள், பொதுவான தர்மங்கள் மூலம்செயல்படுத்த வேண்டும்.

ஜகாத்தின் தொகையை முஸ்லிம்களில் உள்ள ஏழைகளுக்குமட்டுமே கொடுக்க வேண்டும். இதைப் போலவே சதக்கத்துல்ஃபித்ர், நேர்ச்சை, கஃப்பாராவின் தொகைகளையும் முஸ்லிம்ஏழைகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். இவை நீங்கலாக,மற்றும் உள்ள தானதர்மங்கள், நன்கொடைகள், உதவி ஒத்தாசைகள் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் செய்யலாம். இது மனிதாபிமான செயல். இதற்கு அல்லாஹ்விடம் நிச்சயமாக கூலி உண்டு. பூமியில் வாழ்பவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் என நாயகம் (ஸல்)அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நமது உறவினர்களில் யார் யாருக்கு ஜகாத்கொடுக்கலாம்? யார் யாருக்கு கொடுக்கக்கூடாது?

தாய் – தந்தை – பாட்டன் – பாட்டி போன்ற மூதாதையருக்கும்,மகன் – பேரன் – மகள் – பேத்தி போன்ற சந்ததிகளுக்கும்ஜகாத்தின் பொருளை கொடுக்கக் கூடாது. இதைப் போலவேகணவன் – மனைவிக்கும், மனைவி – கணவனுக்கும் கொடுக்கக்கூடாது. ஏனெனில், இவர்களை காப்பாற்றுவது – பராமரிப்பதுஎப்போதும் கடமையாகும்.மேலே கூறப்பட்டுள்ள நபர்கள் நீங்கலாக மற்றும் உள்ளஉறவினர்கள் ஏழைகளாக இருந்தால் அவர்களுக்கு கொடுப்பதேமிகவும் சிறப்புக்குரிய செயலாகும்.உதாரணமாக அண்ணன் -தம்பி, அக்கா – தங்கை, சிறியதந்தை -பெரிய தந்தை – மாமி – சிறிய, பெரிய தாயார், மாற்றாந்தாய், மாற்றாந் தந்தை, மருமகன் – மருமகள் போன்ற உறவினர்கள்ஏழைகளாக இருந்தால் ஜகாத்தின் தொகையை அவர்களுக்குகொடுப்பது மிகச் சிறந்தது.

ஆடுகளுக்குரிய ஜகாத்…

39 ஆடுகள் வர

ை ஜகாத் கடமையில்லை.

40-லிருந்து 120 ஆடுகள் வரை ஒரு ஆடு.

121-லிருந்து 200 ஆடுகள் வரை இரண்டு ஆடுகள்

201-லிருந்து 399 ஆடுகள் வரை மூன்று ஆடுகள்

400-லிருந்து 499 ஆடுகள் வரை நான்கு ஆடுகள்

500-லிருந்து 599 ஆடுகள் வரை ஐந்து ஆடுகள்

600-லிருந்து 699 ஆடுகள் வரை ஆறு ஆடுகள்

700-லிருந்து 799 ஆடுகள் வரை ஏழு ஆடுகள்

இவ்வாறு 400-லிருந்து ஒவ்வொரு நூறுக்கும் ஒரு ஆடு வீதம்ஜகாத் நிறைவேற்றப்பட வேண்டும்.

மாடுகளுக்குரிய ஜகாத்

1- லிருந்து 29 வரை ஜகாத் கடமையில்லை.

30-லிருந்து 39 வரை ஒரு வருடம் நிறைவு பெற்ற கன்று

40-லிருந்து 59 வரை மூன்று வயது மாடு

60-லிருந்து 69 வரை ஒரு வருடம் நிறைவு பெற்ற 2 கன்றுகள்

70-லிருந்து 79 வரை மூன்று வயது மாடு ஒன்றும், 2 வயதுமாடு ஒன்றும்

80-லிருந்து 89 வரை மூன்று வயது மாடு இரண்டு.

90-லிருந்து 99 வரை இரண்டு வயது மாடு 3,

100-க்கு இரண்டு வயது கன்றுகள் 2-ம், மூன்று வயது மாடுஒன்றும்,

இவ்வாறே 60-ஐ விட கூடுதலாக இருக்கும் ஒவ்வொரு 30-க்கும் இரண்டு வயது கன்று ஒன்றையும், ஒவ்வொரு 40-க்கும் 3வயது மாடு ஒன்றையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தங்கத்திற்குரிய ஜகாத்

எண்பத்தியேழரை கிராம் தங்கத்திற்கு – 2 கிராம் 187.5 மி.கி.

11 பவுனுக்கு 2 கிராம் 250 மி.கிராம்

12 பவுனுக்கு 2 கிராம் 400 மி. கிராம்

13 பவுனுக்கு 2 கிராம் 600 மி. கிராம்

14 பவுனுக்கு 2 கிராம் 800 மி. கிராம்

15 பவுனுக்கு 3 கிராம்

16 பவுனுக்கு 3 கிராம் 200 மி. கிராம்

17 பவுனுக்கு 3 கிராம் 400 மி. கிராம்

18 பவுனுக்கு 3 கிராம் 600 மி. கிராம்

19 பவுனுக்கு 3 கிராம் 800 மி. கிராம்

20 பவுனுக்கு 4 கிராம்

25 பவுனுக்கு 5 கிராம்

30 பவுனுக்கு 6 கிராம்

35 பவுனுக்கு 7 கிராம்

40 பவுனுக்கு 1 பவுன்

50 பவுனுக்கு ஒன்னேகால் பவுன்

60 பவுனுக்கு ஒன்றரை பவுன்

70 பவுனுக்கு ஒன்னே முக்கால் பவுன்

80 பவுனுக்கு இரண்டு பவுன்

90 பவுனுக்கு இரண்டேகால் பவுன்

100 பவுனுக்கு இரண்டரை பவுன்பவுன்களை 40-ஆல் வகுத்து எது ஈவாக கிடைக்குமா அதுஅந்த பவுன்களுக்குரிய ஜகாத்தின் அளவாகும்.

ஜகாத் கடமையாகின்ற அளவுக்கு பவுனை அல்லது நகையைஏழைகளுக்கு கொடுத்து விட வேண்டும். அல்லது அதனுடையவிலையை ரூபாயாக கொடுக்கலாம். நகைக்கு அல்லது பவுனுக்குவிலை நிர்ணயம் செய்யும் போது அன்றைய மார்க்கெட்டில் என்னவிலை விற்கப்படுகிறதோ அந்த விலையை கொண்டு நிர்ணயம்செய்ய வேண்டும்.

கடைக்காரர்கள் வாங்கும் விலையை கொண்டு நிர்ணயம்செய்யக் கூடாது. புதிய பவுன், பழைய பவுன் என்ற வித்தியாசம்பார்க்கக் கூடாது. எல்லா பவுன்களும் தரத்தில் ஒன்றே.வியாபாரிகள் தங்கள் தொழிலின் லாபத்திற்காக பழைய பவுனைவிலை குறைத்து வாங்குகிறார்கள்.

ரூபாய்களுக்குரிய ஜகாத்

2009ஆம் ஆண்டு நிலவரப்படி ரூ.16,200 வரை ஜகாத்கடமையாகாது.

20,000 ரூபாய்க்கு 500 ரூபாய்

30,000 ரூபாய்க்கு 750 ரூபாய்

40,000 ரூபாய்க்கு 1000 ரூபாய்

50,000 ரூபாய்க்கு 1250 ரூபாய்

60,000 ரூபாய்க்கு 1500 ரூபாய்

70,000 ரூபாய்க்கு 1750 ரூபாய்

80,000 ரூபாய்க்கு 2000 ரூபாய்

90,000 ரூபாய்க்கு 2250 ரூபாய்

1,00,000 ரூபாய்க்கு 2500 ரூபாய்

தங்களிடம் இருக்கும் மொத்த தொகையை 40ஆல் வகுத்தால்ஈவு என்ன கிடைக்குமோ அந்த தொகையை ஜகாத்தாக நிறைவேற்றிட வேண்டும்.

சிலர் ஆயுளில் ஒரு தடவை ஜகாத்தை நிறைவேற்றினால்போதும் எனக்கூறி மக்களை குழப்பி வழி கெடுத்து வருகின்றனர். இது குர்ஆன், ஹதீஸுக்கும், ஸஹாபாக்கள், இமாம்களின்வழிகாட்டுதலுக்கும் மாற்றமானதாகும்.

இதுகுறித்து சென்னை புரசை ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம்-தமிழக ஜமாஅத் உலமா பேரவை செயலாளர் கே.ஏ. நிஜாமுதீன் மன்பஈ அவர்களின் விளக்கம்…..

ஒவ்வொரு ஆண்டும் தன்வசம் இருக்கும் பொருட்களைகணக்கிட்டு அதற்குரிய ஜகாத்தை நிறைவேற்றிட வேண்டும்.முதலாண்டு ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மறு ஆண்டுஜகாத் கொடுத்திட வேண்டும்.குழப்பவாதிகள் சிலர் ஒவ்வொரு ஆண்டும் ஜகாத் கொடுக்கவேண்டியதில்லை. ஒரு பொருளுக்கு ஆயுளில் ஒரு தடவை ஜகாத்கொடுத்தால் போதுமானது என்பதாகவும், ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மறுபடியும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லைஎன்பதாகவும் கூறி மக்களை குழப்பி ஜகாத் கொடுப்பவர்களைதடை செய்தும், ஜகாத்துடைய நோக்கத்தையே தகர்த்தெறிந்தும்வருகின்றனர்.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஜகாத் கொடுத்திட வேண்டும்என்பதற்கும், ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மறுஆண்டிலும் (நிஸாபுடைய அளவு இருந்தால்) ஜகாத் கொடுத்திடவேண்டும் என்பதற்கும், ஹதீஸ்களிலிருந்தும், ஸஹாபாக்களின் நடைமுறைகளிலிருந்தும், சட்ட மேதைகளின் தீர்ப்புகளிலிருந்தும் இங்கு சில விளக்கங்களை தெரிந்து கொள்வோம்.“ஜகாத் கொடுங்கள்’’ என்று அல்லாஹ்வின் திருவசனமும்,ஜகாத் கொடுத்தல் இஸ்லாமிய ஐந்து கடமைகளில் ஒன்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸும், புனிதமிகு ஸஹாபாகளின் சொற்களும், செயல்களும், இமாம்களின் தீர்ப்புகளும்1400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் ஜகாத்கொடுக் கப்படடு- நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்முஸ்லிம்களின் வழக்கமும், ஒவ்வோர் ஆண்டும் ஜகாத்கொடுத்திட வேண்டும் என்பதையும், ஜகாத் கொடுக்கப்பட்டபொருளுக்கு (நிஸாப் அளவு இருந்தால்) மீண்டும் ஜகாத்கொடுத்திட வேண்டும் என்பதையும் உறுதியுடன்தெரிவிக்கின்றன. இதற்கு வேறு ஆதாரங்களை நாம் காட்டவேண்டிய அவசியமில்லை.எனினும், பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்என்பதற்காக சில விவரங்களை தருகிறோம்.“ஒரு பொருளின் மீது ஓர் ஆண்டு கழன்று வரும் வரை அப்பொருளில் ஜகாத் கடமையாகாது’’ - முஅத்தா மாலிக் (ரஹ்) “ஒரு பொருளில் ஓர் ஆண்டு கழன்று வரும் வரை ஜகாத்கிடையாது’’ - அப்ஜாஸுல் மஸாலிக் “ ஓராண்டு கழன்று வருவதற்கு முன் ஜகாத் நிறைவேற்றப்படமாட்டாது’’ - என ரசூல் (ஸல்) அவர்கள் அருளினார்கள். -

அப்ஜஸுல் மஸாலிக்

- மேற்கூறப்பட்ட ஹதீஸ்களுக்கு இமாம் மாலிக் (ரஹ்)அவர்கள் கூறியுள்ள விளக்கத்தில் ஜகாத் கொடுக்கப்பட்ட நாளிலி ருந்து அதன் மீது (ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளின்மீது) ஒராண்டு கழன்று வரும் வரை அதற்கு ஜகாத் இல்லை.

- நூல் முஅத்தாமாலிக்

ஒவ்வோர் ஆண்டும் ஜகாத்தை வசூலிப்பது ரசூல் (ஸல்)அவர் களின் சுன்னத்தான நடைமுறையில் உள்ளது’’ என இப்னுஷிஹாப் அவர்கள் வாயிலாக இப்னு ஸஃது அவர்கள்கூறியுள்ளதை இமாம் ஷாஃபி அவர்கள் அறிவித்துள்ளார்கள் - நூல் - அல்உம்மு.அப்துல்லாஹ் பின் முஆவியா (ரலி) அவர்கள்அறிவிப்பதாவது-மூன்று காரியங்களை செய்தவர் ஈமானின் சுவையைசுவைத்த வராவார்.

1) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நம்பி அல்லாஹ்வை மட்டுமே வணங்கியவர்.2) தன் பொருளுக்குரிய ஜகாத்தை தன் மகிழ்வுடனும்(பிறருக்கு) உதவி செய்கின்ற முறையிலும் ஒவ்வொரு ஆண்டும்கொடுத்தவர்.3) (கால்நடைகளுக்குரிய ஜகாத்தில்) வயது முதிர்ந்ததையோகுறைவு உள்ளதையோ, நோய்வாய் பட்டதையோ கொடுக்காமல் இருப்பவர். எனினும் உங்களுடைய பொருட்களில் நடுத்தரமானதிலிருந்து கொடுங்கள்.அல்லாஹுத்த ஆலா உங்களிடம்உயர்ந்ததை கேட்கவில்லை. – கெட்டதை கொடுக்கும் படியாகவும்உங்களுக்கு கட்டளையிடவில்லை.’’ என நாயகம் (ஸல்) அவர்கள்அருளினார்கள். நூல் – அபூதாவூத் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தடவை மக்களுக்குஉரையாற்றும் போது, “அநாதைகளுக்கு பொறுப்பேற்றிருப்பவர்அந்த அநாதைகளுக்கு பொருள் இருந்தால் அதில் அவர்வியாபாரம் செய்யவும் (அவ்வாறின்றி, ஒவ்வோர் ஆண்டும்அதற்குரிய ஜகாத்தை நிறைவேற்றுவதின் மூலம்) ஜகாத்அப்பொருளை சாப்பிட்டு (அழித்து) விடுகின்ற அளவுக்கு அதனை(வியாபாரத்தில் ஈடு படுத்தாமல்) விட்டுவிட வேண்டாம்’’ என்றுகூறினார்கள்.நூல் – திர்மிதீ

மேற்கூறப்பட்ட ஹதீஸ்களெல்லாம் நிஸாப் உள்ளவர் ஒவ்வோர்ஆண்டும் ஜகாத் கொடுத்திட வேண்டும் என்பதையும், ஜகாத்கொடுக்கப்பட்ட பொருளுக்கு அடுத்த ஆண்டு (நிஸாபுடையஅளவு இருந்தால்) ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதையும்தெளிவாக தெரிவிக்கின்றன.

நன்றி : மணிச்சுடார் நாளிதழ்.

Tags: சமுதாய செய்திகள்

Share this