Breaking News

அதிரடி சோதனைக்கு உள்ளாகும் கடலூர் மாவட்டம்

நிர்வாகி
0
சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் 3 நாள்கள் அதிரடி சோதனையை போலீஸôர் புதன்கிழமை இரவு தொடங்கினர்.
சனிக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
சுதந்திர தினக் கொண்டாட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில், தீவிரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடக் கூடும் என்ற அச்சம் எழுந்து உள்ளது.
எனவே போலீஸôர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மாநில காவல்துறை தலைவரின் உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஷ்வின் கோட்னீஸ் தலைமையில் 3 நாள் அதிரடி சோதனை புதன்கிழமை இரவு தொடங்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
மாவட்டத்தில் உள்ள 7 உள்கோட்டங்களிலும் அவற்றுக்கான துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில், புதன்கிழமை மாலை 6 மணி முதல், வியாழக்கிழமை காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
லாட்ஜுகளில் அடையாளம் தெரியாத நபர்கள், வெளி மாநிலத்தினர், வெளிநாட்டினர் யாரேனும் தங்கி உள்ளனரா? என்று தனிப்படை போலீஸôர் சோதனையிட்டனர்.
பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய அரசு அலுவலகங்கள், பெரிய வணிக வளாகங்கள் போலீஸôரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
மாவட்ட எல்லை நெடுகிலும் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் கடலோரக் காவல் நிலையங்கள் அனைத்திலும், புதன்கிழமை இரவு தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போலீஸ் சோதனை குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஷ்வின் கோட்னீஸ் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
புதன்கிழமை இரவு 61 லாட்ஜுகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் சட்டம் 109-வது பிரிவின் கீழ் 21 பேரும், போலீஸ் சட்டம் 110-வது பிரிவின் கீழ் 40 பேரும் கைது செய்யப்பட்டு, கோட்டாட்சியர் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் இருந்த 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
300 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில் 80 பேர், குடிபோதையில் வாகனங்கள் ஓட்டியது கண்டறியப்பட்டது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயில்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸ் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவற்றில் போலீஸ் மோப்ப நாய்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு உள்ளது.
ரயில் பாதைகளில் போலீஸ் ரோந்து போடப்பட்டு உள்ளது.
65 கடலோரக் கிராமங்களில் உள்ள விழிப்புணர்வுக் குழுக்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன.
4 மாதங்களுக்கு மேல் ஓர் இடத்தில் புதிதாக வந்து, தங்கி இருக்கும் நபர்கள் விசாரணைக்கு உள்படுத்தப்படுகிறார்கள்.
சுதந்திர தின விழா நடைபெறும் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்துக்கு, 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது என்றார் எஸ்.பி.

Share this