Breaking News

ரமலான் நோன்பு இஸ்லாமிய மதத்தின் இணையில்லா தத்துவம்: ஜெயலலிதா வாழ்த்து

நிர்வாகி
0
அதிமுக சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக அவைத்
ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய மதத்தின் இணையில்லா தத்துவம் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் வாழ்த்துச் செய்தியை, அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அ. அன்வர்ராஜா வாசித்தார்.
அச்செய்தியில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:
ஏற்றத்தையும், இன்பத்தையும் தரக் கூடிய, மன அமைதியை அளிக்கக் கூடிய, இறைப்பண்பை அதிகப்படுத்தக் கூடிய நோன்பிருத்தல் என்பது இஸ்லாமிய மதத்தின் இணையில்லா தத்துவம் ஆகும். ரமலான் மாதத்தில் இந்தப் புனிதப் பணியில் ஈடுபட்டிருக்கும் எனது அருமை இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த புனிதமான ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது உடலையும், உள்ளத்தையும் தூய்மை ஆக்குவதோடு மட்டுமல்லாமல், மனதை ஒருநிலைப்படுத்துகிறது.
இப்படிப்பட்ட புனிதமான ரமலான் மாதத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த ஆண்டு நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.
எனது அழைப்பை ஏற்று அ.தி.மு.க.வின் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
பங்கேற்றவர்கள்: இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் கோ.க. மணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், இந்திய குடியரசு கட்சி பொதுச் செயலாளர் செ.கு. தமிழரசன் உள்ளிட்ட அ.தி.மு.க. தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
மேலும் உதவி தலைமை ஹாஜி முகமது அக்பர், திருவல்லிக்கேணி லப்பை பள்ளிவாசல் துணை இமாம் முகமது பிலால், ஆர்க்காடு இளவரசர் முகமது அலி, நீதிபதி அப்துல் வஹாப் மற்றும் ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags: அ.தி.மு.க இஃப்தார்

Share this