Breaking News

குடிநீர் கொள்ளை

நிர்வாகி
0
'கோடை வரும் பின்னே,​​ குடிநீர்த் தட்டுப்பாடு வரும் முன்னே' என்பதுதான் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகத் தொடரும் பிரச்னை.​ எல்லா நகரங்களிலும் குடிநீர் விநியோகம் போதுமானதாக இல்லை.​ நகர்ப்புறங்களில்,​​ உள்ளாட்சி நிர்வாகம் விநியோகம் செய்யும் குடிநீர்,​​ குளிக்கவும் துணி துவைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.​ அதே நேரத்தில் ஊரகப் பகுதியில் குடிக்கத் தகுதியான நீருக்காகப் பல கிலோமீட்டர் நடந்தும் சைக்கிளிலும் செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது.

தமிழகத்தின் குடிநீர்த் தேவையின் பெரும்பகுதி நிலத்தடி நீரை-​ அதாவது ஏரி,​​ குளம்,​​ கிணறு ஆகியவற்றை நம்பித்தான் இருக்கிறது.​ ஆனால் தமிழகத்தில் நிலத்தடி நீர் போதுமானதாக இல்லை.​ ஏரிகள் வறண்டு கிடக்கின்றன.​ தமிழகத்தில் உள்ள ​ சுமார் 7 லட்சம் பாசனக் கிணறுகளில் 50 விழுக்காடு கிணறுகளில் நீர் இல்லை.​ 10 விழுக்காடு கிணறுகள் பயன்பாடே இல்லாமல் தூர்ந்துவிட்டன என்பதுதான் புள்ளிவிவரம் சொல்லும் தகவல்.​ நல்ல குடிநீருக்காக ஊரக மக்கள் படும் துன்பம் வார்த்தைகளில் அடங்காது.

அரசின் குடிநீர்த் திட்டங்கள் பெரும்பாலும் நதிகளை ஆதாரமாகக் கொண்டவை.​ ஆனால் நதிகள் அனைத்தும்,​​ ஏதோவொரு தொழிற்கூடத்தால் மாசுபடுத்தப்பட்டு,​​ ரசாயனத்தை வெளியேற்றும் வாய்க்காலாகத்தான் ஆகியுள்ளது.​ ​

திருப்பூர் சாயத் தொழிற்சாலைகள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்பேரில் நொய்யல் ஆறு மாசுபட்டதற்காக விவசாயிகள் ரூ.100 கோடி இழப்பீடு பெற வழி ஏற்பட்டது.​ ஆனால்,​​ காவிரி,​​ பாலாறு,​​ தாமிரபரணி ஆறுகளை நாசப்படுத்தும் தொழிற்சாலைகள்,​​ நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு இல்லை என்பதாகச் செயல்படுகின்றன.​ ​

தமிழக அரசின் நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில்கூட,​​ வேலூர் குடிநீர்த் ​ திட்டத்துக்காக ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.​ ஆனால்,​​ இதற்கான நீர் ஆதாரம் எங்கே இருக்கிறது?​ மேட்டூர் அருகே காவிரியிலிருந்துதான் தண்ணீர் கொண்டு வந்தாக வேண்டும்.​ கோடையில் மேட்டூர் அணையே வறண்டு கிடக்கும்போது இத்தனை கோடியிலான திட்டம் எந்த அளவுக்குப் பயன்தரும்?​ நிலத்தடி நீரும் இல்லை.​ நதிகளிலும் நீர் இல்லை.​ இருந்தாலும் அவை மாசுபட்டுக்கிடக்கின்றன என்றால் தமிழகத்தின் குடிநீர்ப் ​ பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

குடிநீர்ப் பிரச்னை தலைவிரித்தாடும் இற்றை நாளில்,​​ அதைக் காசாக்கிக் கொள்ளை லாபம் சம்பாதிக்க அரசியல்,​​ அதிகார வர்க்க ஆதரவுடன் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.​ சில இடங்களில்,​​ குடிக்கத் தகுதியான நீரின் விலை ஒரு குடம் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாயாக இருக்கிறது.​ இதைவிட பகல்கொள்ளை என்னவென்றால்,​​ இதே குடிக்கத் தகுதியான நீரை 20 லிட்டர் கேன்களில் அடைத்து,​​ அடைக்கப்பட்ட குடிநீர் ​(Pa​c‌k​a‌g‌e‌d D‌r‌i‌n‌k‌i‌n‌g Wa‌t‌e‌r)​​ என்ற முத்திரையுடன் ஒரு கேன் ரூ.25 முதல் 30 வரை விற்கிறார்கள்.​ நகர்ப்புறங்களில் வீடுகளிலும்,​​ அலுவலகங்களிலும் இத்தகைய அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை மூலம் யாரோ கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள்.​ ​

இந்த விலை என்பது,​​ இந்தியத் தர நிறுவனச் சான்று பெற்று,​​ முறையாக மறுசவ்வூடு பரவல் உள்ளிட்ட சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்தி,​​ நீரைத் தூய்மைப்படுத்திய குடிநீருக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை.​ ஆனால்,​​ வெறும் அடைக்கப்பட்ட குடிநீருக்கும் அதே விலை வைத்து கொள்ளை அடிக்கிறது ஒரு கூட்டம்.

தமிழகத்தில் உள்ள 6,700 மதுபானக் கடைகள் மூலம்,​​ வெறுமனே விற்பனை வரி,​​ தீர்வை ஆகியவற்றால் மட்டுமே அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கிறது.​ இதே அளவுக்கான வருவாய்,​​ பிளாஸ்டிக் பைகளில் 250 மி.லி.​ அளவு அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை மூலம் யார்யாருக்கோ போய்க் கொண்டிருக்கிறது.​ மதுபானக் கடைகளில் கிடைக்கும் இத்தகைய பிளாஸ்டிக் பைகளில் பெயர் உள்ள நிறுவனங்கள் முறையான அனுமதி பெற்றவைதானா என்பதுகூட சந்தேகம்தான்.​ ​

இத்தகைய அடைக்கப்பட்ட குடிநீர் அல்லது தூய்மைப்படுத்திய குடிநீர் தயாரிப்பு ஆலைகள்,​​ தங்களுக்கான நீர் ஆதாரமாக நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்துகின்றன.​ தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்ச் சட்டம் -2003-ம் ஆண்டு பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது.​ இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கமே நிலத்தடி நீரைத் தவறாகவும்,​​ மாசுபடுத்தவும்,​​ லாப நோக்கில் பயன்படுத்தவும் செய்யும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதுதான்.​ ஆனால்,​​ இந்தச் சட்டம் எல்லோராலும் மறக்கப்பட்டுவிட்டது.

நிலத்தடி நீரை மாசுபடுத்துதல்,​​ முற்றிலுமாகப் பயன்படுத்தி,​​ மக்களுக்குக் கிடைக்காமல் செய்தல் ஆகியவற்றுக்காக எத்தகைய தண்டனை அளிக்கமுடியும்.​ ​ ​ கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கோகோ கோலா ஆலைக்கு ரூ.​ 216 கோடி அபராதம் விதிக்கலாம் என்று அப்பகுதியில் பாதிப்புகளை ஆய்வுசெய்த ​ ​ உயர்நிலைக் குழு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.​ இதில் குடிநீர் ஆதாரங்களை மாசுபடுத்தியதற்காகவும்,​​ உள்ளாட்சிகளில் லாரிகள் மூலம் நல்ல குடிநீர் கிடைக்கச் செய்ய ஏற்பட்ட செலவுக்காகவும் விதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை மட்டும் ரூ.82 கோடி.

தமிழகத்தின் குடிநீர் என்பது பெரும்பாலும் நிலத்தடி நீரைச் சார்ந்து இருப்பதால்,​​ நிலத்தடி நீரை முறைகேடாகப் பயன்படுத்துவோர்,​​ அளவுக்கு மீறி பயன்படுத்தி நிலத்தடிநீரை இல்லாமல் ஆக்குவோர்,​​ நதிகளை மாசுபடுத்துவோர் எல்லோர் மீதும் அபராதம் விதிப்பதன் மூலம்தான் தமிழகத்தின் நீர் ஆதாரங்களைக் காப்பாற்ற முடியும்.​ ​

குடிநீர்க் குழாய் இணைப்பு,​​ பிற பயன்பாட்டுக்கான தண்ணீர் இணைப்பு என இரு இணைப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.​ இதைச் செய்வதும்கூட குடிநீர் பிரச்னைக்குத் தீர்வாக அமையும்.​ ​

இன்றைய முதல் தேவை-​ குடிக்கத்தகுந்த குடிநீர்,​​ அடைக்கப்பட்ட குடிநீர்,​​ தூய்மை செய்யப்பட்ட குடிநீர் ஆகியவற்றுக்கு அரசே நியாயமான விலை நிர்ணயம் செய்வதும்,​​ அனுமதியில்லாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் மக்களுக்குப் பெரும் நன்மை சேர்க்கும்.​ குடிநீருக்காகப் பணத்தை தண்ணீராய்ச் ​ செலவழிக்க முடியுமா என்ன?

Tags: தலையங்கம் தினமணி

Share this