Breaking News

முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் டெலிபோன் ஒட்டுக்கேட்பு: மில்லி கவுன்சில் கண்டனம்

நிர்வாகி
0
புதுடெல்லி,லக்னோ,ஹைதராபாத் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்துவரும் பகுதிகளில் டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதும், கண்காணிப்பு உபகரணங்களை நிறுவியுள்ள உளவுத்துறை நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கெதிராக ஆல் இந்தியா மில்லி கவுன்சிலும், ஜமாஅத்தே இஸ்லாமியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


மொபைல் மற்றும் லேண்ட்லைன் போன்களின் வழி நடத்தப்படும் அந்தரங்க உரையாடல்களை ஒட்டுக்கேட்பதும், அவற்றை பதிவுச் செய்வதும் ஒழுக்க ரீதியாகவும், அரசியல் சட்டப்படியும் தவறு என இவ்வமைப்புகள் கூறுகின்றன.

ஐ.பி உள்ளிட்ட உளவுத்துறை ஏஜன்சிகள் பிரபல அரசியல் தலைவர்களின் டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாகவும், அவற்றை பதிவுச் செய்ததாகவும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியான 'அவுட்லுக்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இதேபோல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளான டெல்லி ஜும்ஆ மஸ்ஜித், ஜாமிஆ நகர் பகுதிகள், லக்னோ, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக் கேட்கப்படுவதாக 'அவுட்லுக்' பத்திரிகை கூறியிருந்தது.


அரசியல் தலைவர்களின் டெலிபோன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்பதை எதிர்த்து பாராளுமன்றத்திலும் வெளியிலும் ரகளை ஏற்படுத்தியவர்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளை சந்தேகத்தின் நிழலில் நிறுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக போதுமான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.

டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக்கேட்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், முஸ்லிம்களை பீதிவயப்படுத்துவதற்கான தந்திரம் என்றும் ஆல் இந்தியா மில்லி கவுன்சில் பொதுச்செயலாளர் டாக்டர் மன்சூர் ஆலம் தெரிவித்தார்.

ஃபலஸ்தீனில் இஸ்ரேல் செய்யும் அதே வேலையைத்தான் அரசு உளவுத்துறை ஏஜன்சிகள் முஸ்லிம் பகுதிகளில் மேற்கொள்கிறது. முஸ்லிம்களும் இந்நாட்டின் குடிமக்கள்தாம். அவர்களை இஸ்ரேலின் கண்ணின் ஊடே காணும் போக்கு பிளவை ஏற்படுத்தும். தேவை ஏற்படும்போதெல்லாம் முஸ்லிம்கள் இந்நாட்டிற்காக தியாகத்தை அர்ப்பணிப்பையும் செய்துள்ளனர். அவர்களின் தேசப்பற்றை குறித்து கேள்வி எழுப்ப எவருக்கும் அதிகாரமில்லை. இவ்வாறு மன்சூர் ஆலம் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிச் செய்யப்பட்ட உபகரணங்களை சிறிய தூர இடைவெளியில் நிறுவியும், ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களில் உபகரணங்களை ஸ்தாபித்தும் மொபைல்,லேண்ட்லைன் போன்களின் அந்தரங்க உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்று ஜமாஅத்தே இஸ்லாமியின் செயலாளர் முஸ்தபா ஃபாரூக்கி குற்றஞ் சாட்டினார். இது முஸ்லிம் சமூகத்தை அந்நியப்படுத்த காரணமாகும் என அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், டெலிபோன் உரையாடல்களை ஒட்டுகேட்ட விவகாரம் குறித்து ஒருங்கிணைந்த பாராளுமன்ற கமிட்டி விசாரணை நடத்தவேண்டுமென்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என்றார்.
நன்றி:கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்

Share this