Breaking News

இஸ்லாமிய வங்கி துவங்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

நிர்வாகி
0
கொச்சி:கேரள மாநிலத்தில் இஸ்லாமிய வங்கியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளுக்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அதேவேளையில் அரசு அல்லது அரசு நிறுவனங்கள் இவ்வங்கியில் முதலீடுச் செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வங்கிக்கெதிரான இறுதித் தீர்ப்புவரும் வரை இந்நிலைத் தொடரும். கேரளமாநிலத்தில் இஸ்லாமிய வங்கியல் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வரும் அல்பராக்கா நிதியியல் நிறுவனம் சட்டப்படி நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.


இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைகளுக்கான தடையை நீக்கவேண்டுமென்று கோரி அல்பராக்கா நிதியியல் நிறுவனமும், இந்நிறுவனத்தின் ப்ரொமோட்டர் டைரக்டர் சி.கே.மேனனும் அளித்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெஸ்தி செலமேஷ்வர், நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தின்(K.S.I.D.C) பங்குகளுடன் மாநிலத்தில் இஸ்லாமிய வங்கி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், ஜனதா கட்சியின் தலைவருமான சுப்பிரமணிய சுவாமி அளித்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைக்கு தடைவிதித்தது.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காததால் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கவியலாது என நீதிமன்றம் அறிவித்தது.

அல்பராக்கா நிதியியல் நிறுவனத்திற்கு இதுவரை முதலீடுச் செய்யவில்லை என K.S.I.D.C உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்தது. இஸ்லாமிய வங்கியல் நடவடிக்கைகள் மதசார்பற்றது என்றும், இதில் எவர் வேண்டுமானாலும் முதலீடுச்செய்யலாம் எனவும் K.S.D.I.C யும் கேரள அரசும் நீதிமன்றத்திடம் விளக்கின.

இவ்வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஜுன் மாதம் 3 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Share this