Breaking News

விவசாயிகள் பிரச்னையைத் தீர்க்க இஸ்லாமிய வங்கியே தீர்வு- எம்.எஸ்.சுவாமிநாதன்

நிர்வாகி
0
விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாகியுள்ளதைத் தீர்க்க இஸ்லாமிய வங்கி முறை சரியான தீர்வாக அமையும் என்று இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என புகழப்படும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

கருணா ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், விதர்பா பகுதியில், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வசூலிப்பதால் அங்குள்ள விவசாயிகள் பெரும் கடனாளியாக மாறியுள்ளனர். இதனால் கடன் தொல்லை தாங்க முடியாமல் அவர்கள் விரக்திக்குத் தள்ளப்பட்டு தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

நேற்று கூட 30 பேர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வட்டியே இல்லாமல் கடன் கொடுக்கும் இஸ்லாமிய வங்கி முறையை அங்கு அமல்படுத்த வேண்டும். அதுதான் அங்குள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண உதவும்.

சிறு வயதில் எனது பெற்றோர் என்னிடம் இருந்த நகைகளை காந்திஜியிடம் வழங்குமாறு அறிவுறுத்தினர். இவ்வாறு தானமாக பெறப்பட்ட நகைகளை காந்திஜி ஏலத்தில் விட்டு அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு ஹரிஜன மக்களுக்கு உதவினார் காந்தி. எனது தந்தை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் . நம்மிடம் உபரியாக உள்ளதை இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறுவார். அதனபடி என்னிடம் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் கை வளையத்தை காந்தியிடம் கொடுத்தேன் என்றார் சுவாமிநாதன்.

கருணா ரத்னா விருது என்பது சுற்றுச்சூழலியல் மற்றும் சைவம் மீதான அகிம்சை, அன்பு .ஆகியவற்றை சிறந்த முறையில் வெளிப்படுத்திப் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் விருதாகும். சென்னையைச் சேர்ந்த கருணா இன்டர்நேஷனல் அமைப்பு இந்த விருதுகளை வழங்குகிறது.

இந்த விருதினை இஸ்லாம் மற்றும் சைவம் குறித்த ஆய்வுக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற முசாபர் ஹூசேன், புளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த சின்னி கிருஷ்ணா, சிபிஆர் பவுண்டேஷனைச் சேர்ந்த நந்திதா கிருஷ்ணா ஆகியோர் உள்ளிட்ட நான்கு பேர் பெற்றனர். அவர்களுக்கு விருதுடன் தலா ரூ. 1 லட்சம் பரிசும் அளிக்கப்பட்டது.

Share this