Breaking News

காட்டுமன்னார்கோவில் அருகே தீவிபத்து 40 வீடுகள் சேதம்: மூதாட்டி சாவு

நிர்வாகி
0
காட்டுமன்னார்கோவில் அருகே வியாழக்கிழமை காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 40 வீடுகள் சேதமடைந்தன ஒரு மூதாட்டி தீயில் கருகி இறந்தார்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கோட்டைமேடு காலனியில் வியாழக்கிழமை திடீரென தீப்பிடித்து அடுத்தடுத்து பரவி, சுமார் 40 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. இவ் விபத்தில் சந்தானமேரி (90) என்ற மூதாட்டி தீயில் கருகி இறந்தார். மேலும் 2 கால்நடைகள் இறந்தன.
ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
தகவலறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தீ விபத்துக்குள்ளான இடத்தைப் பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, கெரசின், வேஷ்டி புடவை, ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினார்.
காட்டுமன்னார்கோவில் ஒன்றியத் தலைவர் ஜெயச்சந்திரன், பேரூராட்சித் தலைவர் கணேசமூர்த்தி, வட்டாட்சியர் இளங்கோவன் ஆகியோர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் விடுத்த கோரிக்கை:
விபத்து ஏற்பட்டவுடன் தொலைபேசியில் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தும் சரியான நடவடிக்கை இல்லை. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
தீ விபத்தில் எரிந்த மாணவர்களின் சான்றிதழ்களுக்கு பதில் மாற்றுச் சான்றிதழ்கள் உடன் வழங்கவும், புதிய குடும்ப அட்டை மற்றும் மின் இணைப்பு ஆகியவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கையில் "மூன்று தினங்களுக்குள் குடும்ப அட்டை வழங்கவும், இலவச மின் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தீயணைப்புத் துறையினர் மீதான புகார் மீது மாவட்ட வருவாய் அலுவலரால் விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் காட்டுமன்னார்கோவிலில் கல்வித்துறை அதிகாரிகள் முகாமிட்டு மாற்றுச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Tags: கா.ம.குடி தீ விபத்து

Share this