Breaking News

சவூதி ஏர்போர்ட்டிலிருந்து எளிதில் வெளியேற பயோமெட்ரிக் கார்டுகள் அறிமுகம்.

நிர்வாகி
0
சர்வதேச விமான நிலையங்களில் குடியேற்று உள்நுழை / வெளியேற்றக் கவுண்டர்களில் நெடுநேரம் வரிசையில் காத்திருக்கும்நடைமுறைக்கு சவூதி சர்வதேச விமான முனைமம் விரைவில் தீர்வுகாண உள்ளது.

பயணிகளின் கைரேகை, கண்ரேகை மற்றும் இதர அடையாளங்களைக் கொண்ட தகவல் அடங்கிய விரைவு வெளியேற்ற மின்னணு வாசல்களில் பொருத்தப்பட்ட பயோமெட்ரிக் கருவிகளால் உடனடியாக ஏர்போர்ட்டிலிருந்து வெளியேற/ உள்வர முடியும்.

பயணிகள் இத்தகைய அட்டைகளை விமானநிலையச் சிறப்பு வாசல்களில் பொருத்தப்பட்ட இயந்திரத்தில் காட்டி அதிவேகமாக தங்கள் குடியேற்ற நடைமுறைகளை முடித்துச் செல்லலாம்.சவூதி உள்துறைஅமைச்சின் அறிவுறுத்தலின்படி உள்நாட்டு / வெளிநாடுக் குடிமக்களின் சுயவிபரங்களைக் கணினி மயமாக்குவதன் மூலம் ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்றத்தின் மூலம் குற்றவியல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் திட்டத்தின் ஒருபகுதியே இந்த விரைவு ஈ-கேட் அட்டை.

தற்போது சவூதி ஏர்போர்ட் மற்றும் குடியேற்ற அலுவலகங்களில் கணினி மயமாக்கப்பட்ட தகவல்களே புழக்கத்தில் உள்ளது.

பயோமெட்ரிக் அட்டைமூலம் குடியேற்ற நடைமுறைகளை விரைவாகவும் துல்லியமாகவும் செய்ய முடியும். சவூதி உள்துறை அமைச்சக வட்டாரத் தகவலின்படி,பயோமெட்ரிக் அட்டை உயர்தர தொழில்நுட்பம் கொண்டதாகும்.இதன்மூலம் குறிப்பிட்டத் தகவல் தேடும்பணி ஓரிரு நொடிகளில் கிடைத்துவிடும் என்றார் சவூத் அல் கஹ்தானி என்ற அமைச்சகப் பணியாளர்.

பிரத்யேக மின்னணு வாசலைக் கடக்கும் பயணிகள்,தங்கள் குடியேற்ற/வெளியேற்ற விபரம் அடங்கிய அறிக்கையைப் பெறுவார்கள். இந்த புதிய சிஸ்டம் மூலமாக சுமார் 2000 கைரேகைகளைப் பதிவு செய்யும் சாதங்களையும் கையடக்க கைரேகை சாதனங்களையும் இணைத்துச் செயல்படும் என்றார். இதுபோன்ற ஐரிஸ் கண்ரேகை கேமராவில் பதிவு செய்யப்பட்ட விரைவு ஈ-கேட் அட்டைகள் துபாயில் கடந்த நான்காண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share this