Breaking News

"மத நல்லிணக்கத்தால் தான் சமூகம் ஆரோக்கியமாக மாறும்'' கவிஞர் கனிமொழி எம்.பி. பேச்சு

நிர்வாகி
0
சென்னை, செப்.19-
"மத நல்லிணக்கத்தால் தான் சமூகம் ஆரோக்கியமாக மாறும்'' என்று கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. கூறினார்.
நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
இந்திய ïனியன் முஸ்லிம் லீக் பெண்கள் பிரிவு சார்பில் சென்னை எழும்பூரில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மாநில மகளிர் அணி அமைப்பாளர் பாத்திமா முசப்பர் தலைமை தாங்கினார்.
கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி., சமூக நலவாரிய தலைவி சல்மா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நோன்பு கஞ்சி குடித்தனர்.
நிகழ்ச்சியில் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசியதாவது:-
பெண் கல்வி
நாம் மதங்களால் வேறுபட்டு இருப்பவர்களை சகோதரத்துவம் தான் இணைக்கிறது. தமிழர்களாக நாம் ஒன்றுப்பட்டு இருக்கிறோம்.
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பது அண்ணாவின் குரல். முதல்-அமைச்சர் கருணாநிதி அதற்காகவே பாடுபட்டு வருகிறார். மறைந்த காயிதே மில்லத்தும் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் முதன் முதலில் வலியுறுத்தினார். அந்தளவுக்கு நாம் தமிழர்களாக ஒன்றுபட்டு இருக்கிறோம். இதில் நம்மை பிரிப்பதோ அல்லது வேறுபடுத்தி பார்க்கவோ முடியாது.
தமிழக அரசு வழங்கிய 3.2 இடஒதுக்கீடு பெண்களுக்கும் உண்டு. பெண்கள் தங்களுக்கு உள்ள உரிமைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு ஆண் கல்வி கற்றால் அது குடும்பத்தை உயர்த்தும். அதே சமயத்தில் ஒரு பெண் கல்வி கற்றால் அது இந்த சமுதாயத்தையே மாற்றியமைக்கும். மத்திய, மாநில அரசுகள் பெண் கல்வியை ஊக்குவித்து வருகிறது. பெண்கள் தங்களது உரிமைகளை பெற்று கல்வியை பெற வேண்டும்.
மத நல்லிணக்கம்
சமுதாயத்தில் போராடி இன்று உயர்ந்து இருக்கும் பெண்மணிகளை உதாரணமாக கொண்டு இன்றைய தலைமுறை பெண்கள் வாழ்வில் உயர வேண்டும். உங்களை சமுதாயம் ஒதுக்காது. வரவேற்கவே செய்யும்.
மதம், சாதி அடிப்படையில் புரிந்து கொள்ளாமல் ஒருத்தரை ஒருத்தர் வெறுப்பை உமிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற கால கட்டத்தில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சாப்பிடும் உணவு, உடை இவற்றால் மாற்றம் வரலாம். மனித உணர்வால் எப்படி மாற்றம் வரும். இதை இப்படியே விட்டு விட முடியாது. ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு சகோதர உணர்வுடன், பலமான நட்பு பாலத்தை உருவாக்கி காட்ட வேண்டும்.
மத நல்லிணக்கத்தால் தான் சமூகம் ஆரோக்கியமாக மாறும். இந்த நிலை ஏற்பட்டால் தான் அடுத்த தலைமுறை அமைதியாக வாழ முடியும். இதை இப்போதே நாம் செய்ய வேண்டும். மத நல்லிணக்கத்திற்காக நமது பயணத்தை இப்போதே வகுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
இதை தொடர்ந்து கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. ஏழை எளியோருக்கு சேலைகள், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள், விதவை பெண்களுக்கு தையல் எந்திரங்கள், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மகளிர் அணி தலைவி நூர்ஜஹான், வீராங்கனை அலீஷா, முஸ்லிம் லீக்கின் மகளிர் அணி நிர்வாகிகள் பாத்திமா நசீருதீன், ஆலிமா அம்துல்ஹாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: இஃப்தார் கனிமொழி மகளிர் அணி முஸ்லிம் லீக்

Share this