Breaking News

தமிழக முஸ்லிம் சமுதாய அமைப்புகளுடன் தமிழக சட்ட அமைச்சர் பேச்சு வார்த்தை

நிர்வாகி
0
தமிழக அரசு கொண்டு வந்துள்ள தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009 என்ற கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் குறித்து இன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் குறித்து பரவலாக தமிழகத்தில் முஸ்லிம் சமுகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கடந்த பிப்ரவரி முதல் வாரம் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவி ஏ.இ. அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் சென்னையில் 22 முஸ்லிம் அமைப்புகள் பங்குக் கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்து தமிழக அரசு முஸ்லிம்களின் நலனை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அரசிடம் இக்கோரிக்கையை வலியுறுத்த வல்லுனர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன், தேசீய லீக் தலைவர் பஷீர் அஹ்மது, ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக மவ்லவி முனைவர் அன்வர் பாதுஷா உலவி, மவ்லவி இல்யாஸ் ரியாஜி, ஜமாஅத்தே இஸ்லாமி சார்பில் எஸ். என். சிக்கந்தர், இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முஹம்மது முனீர்;, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் சார்பில் உமர் பாரூக் மற்றும் வழக்குறைஞர் ஜீவகிரிதரன் ஆகியோருடன் ஒருங்கிணைப்பாளர் அப்போலோ ஹனீபாவும் இடம் பெற்றனர். இந்த வல்லுனர் குழு ஐந்து முறை கூடி தமிழக அரசுக்கு சமுதாயத்தின் சார்பில் அளிக்கப்பட வேண்டிய கோரிக்கையை வடிவமைத்தது.


இறுதியான (மார்ச் 6) அன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் இந்த வல்லுனர் குழுவை சந்தித்து கருத்தறிய சட்ட அமைச்சர் துரைமுருகன் நேரம் ஒதுக்கினார். அரசு சார்பில் சட்ட அமைச்சருடன் தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் திருமதி எஸ். மாலதி, தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் ஆர். சிவகுமார், துணை முதல்வரின் துணைச் செயலாளர் கே. ரகுபதி, சட்டத்துறை துணைச் செயலாளர் திருமதி ஜானகி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்குக் கொண்டனர். சுமார் ஒன்னரை மணிநேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையின் இறுதியில் தமிழக அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் வல்லுனர் குழு அளித்த கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இது குறித்த முறையான அரச அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகின்றது.

கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் தொடர்பாக நிலவி வந்த சர்ச்சை இத்துடன் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags: திருமணப்பதிவுசட்டம்

Share this