Breaking News

கடலூரில் சூறாவளியுடன் மழை

பக்கர்Brothers.kollumedu
0

கடலூர் : வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.வங்கக் கடலில் உருவாகியுள்ள 'லைலா' புயல் சின்னம் காரணமாக கடலூர், நாகை மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன், குளிர்ந்த காற்றும் வீசியது. கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணிக்கு கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பண் ருட்டி பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீ., வருமாறு:தொழுதூர் 90, மேமாத்தூர் 51, கீழ்செருவாய் 43, புவனகிரி 24, பெலாந்துறை 3, கொத்தவாச்சேரி 20, விருத்தாசலம் 17, சேத்தியாத்தோப்பு 15.5, பண்ருட்டி 15.20, சிதம்பரம் 12, லக்கூர் 11, காட்டுமன்னார்கோவில் 10, கடலூர் 9.6, வானமாதேவி 8.3, குப்பநத்தம் 6.2, காட்டுக்கூடலூர் 5, பரங்கிப்பேட்டை 5, ஸ்ரீமுஷ்ணம் மற்றும் வேப்பூர் 4 மி.மி., அளவு மழை பெய்தது.
இந்நிலையில் வங்கக் கடலில் 600 கி.மீ., தொலைவில் மையம் கொண்டிருந்த 'லைலா' புயல் நேற்று அதிகாலை சென்னையை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் காலை 6.20 மணிக்கு 40 முதல் 50 கி.மீ.,வேகத்தில் 30 நிமிடம் வரை சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.திடீர் சூறாவளிக் காற்றால் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் விழுந்தன.கடல் அலை 12 அடி முதல் 15 அடி வரை எழும்பி சீற்றத்துடன் காணப்பட்டது. கரைகளில் நிறுத்தி வைத்திருந்த கட்டுமரங்களை ராட்சத அலைகள் கடலில் இழுத்து சென்றன.

Share this