Breaking News

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0
சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,இந்திய தவ்ஹீத் ஜமாஅத், விருகை பகுதி பள்ளிவாசல் கூட்டமைப்பு உள்பட முஸ்லிம் அமைப்புகளும், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சியினரும் ஒருங்கிணைந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னை அசோக்நகரில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி செய்த அவர்களை போலீசார் தடுப்பு வேலி அமைத்து அசோக்நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஒன்றுகூட வைத்தனர். பின்னர், அவர்கள் அந்த இடத்தில் இருந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயற்குழு உறுப்பினர் முகமது அனிபா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது அலி ஜின்னா, தமிழ்நாடு ஜமாத் ஹூல்மா சபை வழிகாட்டி தர்வேஷ் ரஷாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் தேசிய கொடியை பிடித்தபடியும், குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

சென்னை வண்ணாரப்பேட்டை சுற்றுவட்டார ஜமாத் கூட்டமைப்பு சார்பில் வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலை சிமெண்ட்ரோடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட திரளான முஸ்லிம்கள் கையில் தேசிய கொடி மற்றும் கண்டன வாசகங்கள் எழுதிய பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தாம்பரம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் ஏ.எஸ்.எம். ஜூனைது மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

இதேபோல் பூந்தமல்லி வட்டார ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் சார்பில் பூந்தமல்லி குமணன்சாவடி பஸ் நிறுத்தம் அருகே முகமது ஹனீப் கவுஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பூந்தமல்லி, போரூர், மாங்காடு, குன்றத்தூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 17-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை சேர்ந்த முஸ்லிம்கள் கையில் தேசிய கொடியுடன் ஊர்வலமாக வந்து கலந்து கொண்டு மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், காலடிப்பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 16 பள்ளி வாசல் நிர்வாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று திரண்டு திருவொற்றியூர் டோல்கேட் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 3 ஆயிரத்துக்கும் பெண்கள் உள்பட திரளான முஸ்லிம்கள் கையில் தேசிய கொடி ஏந்தி பங்கேற்றனர்.

Tags: சமுதாய செய்திகள்

Share this