Breaking News

கோவையில் நடைப்பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்வுரிமை மாநாடு

நிர்வாகி
0
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை கருப்பு சட்டங்களான CAA, NRC, NPR ஆகியவைகளுக்கு எதிரான "வாழ்வுரிமை மாநாடு" பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தலைமையில் நடைப்பெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா Ex. MP, மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், மாமன்னர் திப்பு சுல்தானின் கொள்ளுப்பேரன் பக்தியார் அலி சாஹிப், பாதிரியார் ஜெகத் கஸ்பர், மஜக அவைத்தலைவர் நாசர் உமரி, இணைப் பொதுசெயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, அலிகார் பல்கலைகழக மாணவர் பேரவை செயலாளர் ஹுசைவா அமீர் ரஷாதி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (JNU) மாணவர் பேரவை செயலாளர் சதீஷ் யாதவ், AMU மாணவர் பேரவை உறுப்பினர் கௌதம், குலிஸ்தான் பத்திரிகை ஆசிரியர் முக்தார் அஹமது, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
மாநாட்டு திடலுக்கு "காந்திஜி" அவர்களின் பெயரும், மாநாட்டு மேடைக்கு குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிரான டெல்லி ஷாஹின் பாக் போராட்டக்களத்தில் குளிரால் உயிர் நீத்த "தியாக குழந்தை " ஜஹானாரா வின் பெயரும் பிரதான நுழைவாயிலுக்கு நீதியரசர் ராஜேந்திர சச்சார் அவர்களின் பெயரும் சூட்டப்பட்டு இருந்தது.
இதுபோல் பெண்கள் நுழைவாயிலுக்கு காஷ்மீரில் மதவெறியர்களால் கற்பழித்துக் கொல்லப்பட்ட சிறுமி ஆசிபாவின் பெயரும்,,மற்றொரு நுழைவாயிலுக்கு பாசிஸ்டுகளால் கொல்லப்பட்ட எழுத்தாளர் கெளரி லங்கேஷ் மற்றும் காவி பயங்கரவாததிற்கு எதிராகப் போராடி உயிர்நீத்த மராட்டிய முன்னாள் டிஜிபி ஹேமந்த் கர்கரே ஆகியோரின் பெயரும் சூட்டப்பட்டு இருந்தது. இவையாவும் சங்கிகளின் பயங்கரவாதத்தை தோலுரிப்பதாக அமைந்தது.
மாநாட்டை முன்னிட்டு சக்தி கலைக்குழு மற்றும் புதுகை பூபாளம் கலைக்குழுவினர்களின் அரசியல் நையாண்டி கலையரங்கத்தை துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர் தொடங்கி வைத்தார். செம்மொழி மாநாடு நடைப்பெற்ற கொடிசியா மைதானத்தில் தான் இம்மாநாடு நடைப்பெற்று, சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
திடலை சுற்றிலும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் குழுமியதால் விமான நிலைய சாலை, அவினாசி சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை உள்ளிட்ட பல சாலைகள் திணறியது. நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சீறுடை தரித்த மஜக இளைஞர் அணியினர் வாக்கி டாக்கி தொலை தொடர்பு கருவிகள் மூலம் நிலைமையை ஒழுங்கு படுத்தியவாறு இருந்தனர்.
6 மணிக்கெல்லாம் கோவை குலுங்கியது என்பதே உண்மை.. இடவசதி இன்மை மற்றும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், போக்குவரத்து காவலர்கள் என சகலரும் களமிறங்கி அனைத்தையும் சீர் செய்ய முயன்றதையும் பாராட்ட வேண்டும்.
மாநாட்டு திடலில் கட்சியின் கொடியை தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர் ஏற்ற அதன் பிறகு பொருளாளர் ஹாருண் ரசீது முழக்கங்களை எழுப்பி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இரவு 8 மணியளவில் மாநாட்டு திடலில் அமர்ந்து இருந்த அனைத்து மக்களும் எழுந்து தங்களது செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டு டெல்லியில் கலவரத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக்கொண்டனர். இந்த நிகழ்வு காண்போர் அனைவரையும் உணர்ச்சி வசத்தில் ஆழ்த்தியது. எங்கும் ஒளிமயமாய் உருக்கமாக மாறியது. மேடையின் பின்புறம் இருந்த பிரம்மாண்ட டிஜிட்டல் திரை இதை ஒளிபரப்பிய போது அதன் பிரம்மாண்டம் மிரள வைத்தது எனலாம். தென்னிந்தியாவில் ஒரே இடத்தில் இது போன்ற ஒளி வழி எதிர்ப்பு திரட்டப்பட்டது இங்கு தான் என பலரும் குறிப்பிட்டனர்.
மாநாட்டு நிகழ்வில் இடையிடையே மாணவர் இந்தியாவின் சார்பில் முழங்கங்கள் எழுப்பப்பட்டது.
அது கூட்டத்தை எழுந்து நின்று எழுச்சிக் கொள்ள செய்தது. பெண்கள் உள்ளிட்ட மக்கள் ஆவேசமாய் முழக்கங்களை எதிரொலிக்க அது போர் குரல்களாக மாறியது.
இதில் மக்களையும், திடலையும் இளைஞர்அணியினர் கட்டுக்கோப்பாக வழிநடத்தினர்.
துணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாருக் மற்றும் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜ்தீன் ஆகியோர் இவற்றை கண்காணித்தனர்.
தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் ஹாரிஸ், தலைமையில் அமீது ஜாபர், தாரிக், கோவை சம்சுதீன், உள்ளிட்டோர் அடங்கிய குழு நிகழ்ச்சியினை சிறப்பாக நேரலை செய்தனர்.
ராட்சத கேமராக்கள் , நவீன ஒலிக் கருவிகள் மூலம் நிகழ்ச்சிகள் ஒலி, ஒளி செய்யப்பட்டது.
இரவு 8 மணி அளவில் எதிர்ப்பார்ததை விட பிராம்மண்டமான மக்கள் திரள் கூடி மாநாட்டு திடல் நிரம்பியது. வெளியும் கூட்டம் திரண்டிருந்தது என பத்திரிக்கையாளர்கள் வியந்து கூறினர்.
நிகழ்ச்சியினை துணைப்பொதுச்செயலாளர் தைமிய்யா தொகுத்து வழங்கினார். துணைப்பொதுச்செயலாளர் செய்யது முஹம்மது பாருக் அவர்கள் வரவேற்பு உரை ஆற்றினார்.
டிசம்பர் 12 அன்று தமிழகத்தில் முதன் முறையாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மஜக தான் பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நகல் கிழிப்பு போராட்டத்தை தொடங்கி வைத்தது.
அதன் பிறகு பேரணிகள், ஆர்ப்பாட்டம் மண்டல , மாவட்ட கூட்டங்கள் என பலரும் இதை வலிமைப்படுத்தினர்.
ஆனால் தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக முதல் முதலாக மாநாடு நடத்தி அரிய கள சாதனையை உற்சாகமாக செய்து மஜக முடித்திருக்கிறது என பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார். அவர் சகோதர அமைப்புகள் ஜமாத்துகள், தமிழ் உணர்வு அமைப்புகளின் ஒத்துழைப்புக்கும் நன்றி கூற தவறவில்லை. மாநாடு பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தது.
மேடையின் மிரம்மாண்டமும், திடலின் ஏற்பாடுகளும் தேசிய மற்றும் திராவிட கட்சிகளுக்கு இணையான பிம்பத்தை உருவாக்கியிருந்தது.
புத்தக கடைகள், உணவு கடைகள் , டாய்லட் வசதிகள், குடிநீர் வசதிகள்,வழிபாட்டு பகுதிகள் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்து, முஸ்லிம், கிரித்தவ, சீக்கிய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிரிக்கும் படங்களுடன் "இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதுகாப்போம்" என்ற 80 அடி நீள பேனர் மேடையின் முன்பகுதியில் தொங்க விடப்பட்டது. அது காண்போரை பரவசப்படுத்தியது.
அது போல் திடலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர்களில், பூலித்தேவர், திப்பு சுல்தான், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள் போன்ற மன்னர்களின் தியாகங்களும், காந்தி, அம்பேத்கார், பசும்பொன் தேவர், காமராஜர், காயிதே மில்லத் போன்றோரின் கருத்துகளும் படங்களுடன் வரையப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோனிகா பஷீர் ஹாஜியார், வட பழனி இமாம் தர்வேஸ் ரஷாதி, சமூக சேவகர் அப்பல்லோ ஹனீபா, தேவர் சமுதாய பிரமுகர் சரவணன் மாமா ஆகியோரும் மேடையில் அமர, தமிழக கொங்கு இளைஞர் பேரவை , முக்குலத்தோர் புலிப் படை மற்றும் விசிக பிரமுகர்களும் தங்கள் வருகையை பதிவு செய்திருந்தனர்.
கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த ஜமாத் தலைவர்கள் மற்றும் மார்க்க அறிஞர்களுக்கு தனி பகுதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.
துணைப் பொதுச் செயலாளர்கள் மன்னை செல்லச்சாமி, மதுக்கூர் .ராவுத்தர்ஷா, மண்டலம். ஜெய்னுலாபுதீன் , மாநில செயலாளர்கள் நாச்சிக்குளம். தாஜ்தீன் , ராசுதீன், சீனி முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், ஷமீம் அஹ்மது ஆகியோர் உரையாற்ற, கோவை பஷீர், , பாபு சயின்ஷா,நாகை முபாரக், துரைமுகம்மது, இப்ராகிம், காயல் சாகுல் , அப்சர் சைய்யது,ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர்.
மாநில இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா தலைவர் ஜாவித், MJTS தொழிற்சங்க தலைவர் பம்மல் சலீம், தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஹாரிஸ், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், MJVS வணிகர் சங்க செயலாளர் யூசுப் ராஜா, மீனவர் அணி செயலாளர் பார்த்தீபன், MJTS மாநில செயலாளர் கோவை ஜாபர் உள்ளிட்டோர் 17 தீர்மானங்களை அடுத்தடுத்து முன்மொழிந்தனர்.
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH. அப்பாஸ், அவர்கள் நன்றி கூற, தேசிய கீதத்துடன் மாநாடு நிறைவுற்றது. அப்போது கோவை மாவட்ட நிர்வாகிகள் முகத்தில் வெற்றி புன்னகையை பார்க்க முடிந்தது.
அவர்கள் மாநாட்டு குழு, வரவேற்பு குழு, நிதி குழு, மேடை குழு, திடல் குழு என பல குழுக்கள் சிறப்பாக பணியாற்றி மாநாட்டை நாடு திரும்பி பார்க்கும் நிகழ்வாக மாற்றியுள்ளனர்.
வெளி மாவட்ட மக்கள் தங்க மண்டபங்கள் ஏற்பாடு, உணவு வசதிகள், திடல் ஒழுங்கு என கோவை மாவட்ட மஜக நிர்வாகிகளும், அனைத்து மட்ட பொறுப்பாளர்களும், மஜக உறுப்பினர்களும் கடந்த ஒரு வாரமாக ஆற்றிய சேவைகள் அளப்பரியது.
தமிழகம் முழுக்க விளம்பரங்கள் செய்து நன்கொடைகள் திரட்டி , வாகனங்கள் மூலம் மக்களை ஒன்று திரட்டிய அனைத்து மாவட்ட மஜக நிர்வாகிகளும்,மஜக தொண்டர்களும் தங்களது கள வலிமையை தமிழ் நாட்டுக்கு செயல் வழியாக நிருபித்துளனர்.

Tags: செய்திகள்

Share this