Breaking News

ஈகையைத் தொடர்வோம்! பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் ஈகைப் பெருநாள் வாழ்த்துச் செய்தி:

நிர்வாகி
0

 



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் ஈகைப் பெருநாள் வாழ்த்துச் செய்தி:

ஈகைப் பெருநாள் என்னும் ஈதுல் ஃபித்ரைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயங்கனிந்த நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, அதிகாலை முதல் மாலை வரை ஒரு சொட்டு நீரும் பருகாமல், உண்ணாமல், உணர்வுகளைக் கட்டுப்படுத்திப் பெற்றுள்ள மார்க்கப் பயிற்சியை ஆண்டு முழுவதும் மனதிற்கொண்டு அறநெறிப்படி வாழ வேண்டும் என்பதே இறைவனுக்கு விருப்பமான வாழ்வாகும்.
இஸ்லாமிய இறை வணக்கம் என்பது தொழுகை, நோன்பு இவற்றோடு மட்டும் நின்று விடுவதல்ல. பிற மனிதர்களின் நலன் காக்கவும், அவர்களின் சிரமங்களைப் போக்கவும் பாடுபடுவது கூட இஸ்லாத்தின் பார்வையில் இறைவணக்கமாகவே உள்ளது.
பொருளாதார நெருக்கடி, பெரும் நோய் தொற்று, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அரசியல் காரணங்களால் அடக்குமுறைக்கும், போர் சூழலுக்கும் உள்ளாகும் உலகம் என நாலாபுறமும் நிலைகுலைந்து போயுள்ள சூழலில், இஸ்லாம் வலியுறுத்தும் ஈகையென்னும் அருட்குணம் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் உதவியிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஏழை, எளியவர்களும், அறிவிக்கப்படாத அடக்குமுறைகளால் வீடு; வாசல்களை இழந்து தவிக்கும் எண்ணற்றோரும், சமூகத்தின் அடித்தட்டு நிலையில் உள்ள அனைத்துப் பிரிவினரும் கடுமையான வாழ்வியல் நெருக்கடியைச் சந்தித்துள்ள சூழலில், இஸ்லாம் வலியுறுத்தும் ஈகை என்ற அருட்குணம் இதற்கெல்லாம் ஒரு அருமருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் அனைவரும் வாழ்வில் ஈகையை முன்னிலும் அதிகமாகக் கடைப்பிடித்து, இன்னலுற்ற மக்களின் மீட்சிக்குப் பணியாற்ற வேண்டும்.. முஸ்லிம்கள் முஸ்லிமல்லாத நமது தொப்புள்கொடி உறவுகளின் நலன் பேணுவதிலும் முன்னின்று பணியாற்றி மனிதநேயமிக்க சமூகத்தைப் பேணிக்காத்துப் பணியாற்ற வேண்டும் என்பதையும் ஈகைப் பெருநாளின் செய்தியாகச் சமர்ப்பிக்கிறேன்.
இந்திய ஒன்றியம் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிவரும் சூழலில், சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகள் ஒவ்வொன்றக முடக்கப்பட்டு வரும் சூழலில், தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்குவதற்கும், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதோடு, வாழ்நாள் சிறைவாசிகள் விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களை விடுதலை செய்ய ஆவன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற சமுதாயத்தின் எதிர்பார்ப்பை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.
பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் ஈகைத் திருநாளில் அனைத்து மக்களின் வாழ்விலும் வசந்தம் ஏற்பட இறைவனைப் பிரார்த்திப்போம்.
அனைவருக்கும் அகங்கனிந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்.

Tags: சமுதாய செய்திகள்

Share this