மலேசியா , சிங்கப்பூர் நாட்டினர் இந்தியாவிற்கு வர விசா சலுகை வழங்க நவாஸ்கனி எம்பி கோரிக்கை.
இந்தியர்களுக்கு மலேசியா செல்ல விசா சலுகை வழங்கப்பட்டிருப்பது போல,
மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாட்டினருக்கு இந்தியாவிற்கு வர விசா சலுகை வழங்க பரிசீலிக்க வேண்டும்.
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்பி கோரிக்கை.
—
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான கே நவாஸ்கனி எம்பி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது.,
இந்தியர்கள் மலேசியா செல்ல டிசம்பர் 1 முதல் விசா தேவை இல்லை என மலேசியா அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதேபோல மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாட்டினர்களும் இந்தியா வருவதற்கு விசா சலுகை வழங்க வேண்டும்.
மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாட்டினர் அதிகமாக இந்தியாவோடு தொடர்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழ்நாட்டோடு பாரம்பரிய கலாச்சார ரீதியாகவும், தமிழர்களோடும் நெருங்கிய தொடர்பு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.
வணிக ரீதியாகவும், சுற்றுலாவிற்கும், மருத்துவ தேவைகளுக்கும் அதிகமாக தமிழ்நாட்டிற்கு பயணிப்பவர்களாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாட்டினர் இருக்கிறார்கள்.
மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாட்டினர்கள் இந்தியா வர விசா பெறுவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
அந்த நடைமுறைகளையும் இலகுவாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 192 நாடுகளுக்கு செல்ல சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கும், 181 நாடுகளுக்கு செல்ல மலேசியா பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கும் விசா தேவை இல்லை என்ற நடைமுறை தற்போதும் உள்ளது.
இந்தியா வருவதற்கும் விசா சலுகை அறிவிக்கப்பட்டால் பொருளாதார ரீதியாகவும், சுற்றுலா மேம்படுவதற்கும், அன்னிய செலாவணி மேம்படுவதற்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.
எனவே, இந்தியர்களுக்கு மலேசியா செல்ல விசா சலுகை வழங்கப்பட்டிருப்பது போல,
மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாட்டினருக்கு இந்தியாவிற்கு வர விசா சலுகை வழங்க பரிசீலிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Tags: செய்திகள்